கை, வாய் செயலிழந்த இளம் பெண் சிகிச்சைக்கு உதவிய ஆட்சியர்
உடல்நல பாதிப்பால் வாய், கை செயல் இழந்த இளம்பெண்ணுக்கு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை.
HIGHLIGHTS
கரூர் நகராட்சிக்குட்பட்ட வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்தவர் கண்மணி (வயது 20). இவர் கடந்த ஜனவரி மாதம் வீட்டில் இருந்து தவறி கீழே விழுந்தபோது, வாய், கை செயல் இழந்தது. இவருக்கு ஒரு தங்கை மட்டுமே உள்ளார். இவர்களுக்கு பெற்றோர் இல்லை. பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தனர். சில மாதத்திற்கு முன்பு பாட்டியும் இறந்துவிட, நிற்கதியாய் நின்ற இவர்களின் நிலை குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உடனடியாக மருத்துவக்குழுவினரை கண்மணியின் வீட்டிற்கே சென்று பரிசோதனை செய்ய உத்தரவிட்டார்.
அதனடிப்படையில் கரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் இருந்து மருத்துவக்குழுவினர் வெள்ளாளப்பட்டியில் உள்ள கண்மணியின் வீட்டிற்கே சென்று பரிசோதித்து, அவரை கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், இன்று அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனைக்கு சென்ற மாவட்ட ஆட்சியர், கண்மணி அனுமதிக்கப்பட்டிருந்த வார்டிற்கே நேரில் சென்று அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், கண்மணிக்கு ஏதேனும் உயர் சிகிச்சை தேவைப்படும்பட்சத்தில் மதுரை அல்லது சென்னை அரசு மருத்துவக்கல்லூரிகளுக்கு அழைத்துச்செல்ல மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உரிய ஏற்பாடுகள் செய்யலாம் என்று மருத்துவக்கல்லூரி முதல்வரிடம் தெரிவித்ததார்.
மேலும், கண்மணியின் தங்கையிடம் உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விரைவில் கண்மணி பூரண குணமடைந்து இயல்பு நிலைக்குத் திரும்புவார் என்றும் ஆறுதல் தெரிவித்த மாவட்ட ஆட்சியர் தன்னுடைய செல்போன் எண்ணை கண்மணியின் சகோதரியிடம், தனது கைப்பட எழுதிக் கொடுத்து எந்த உதவி வேண்டுமென்றாலும் தன்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்வின்போது, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் முத்துச்செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.