ரயில் நிலையத்தில் ரயிலில் ஏற முயன்ற ராணுவ வீரர் தவறி விழுந்து உயிரிழப்பு
கரூர் ரயில் நிலையத்தில் ரயிலில் ஏற முயன்ற ராணுவ வீரர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
HIGHLIGHTS
கரூர் ரயில் நிலையத்தில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்ததால் ராணுவ வீரர் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் மாரம்பாடி அந்தி பெரிய குளத்து பட்டியை சேர்ந்தவர் அந்தோணி தாஸ். இவரது மகன் பிச்சை முத்து பாஸ்கர் (வயது 33 )இவர் ராணுவ வீரர் ஆவார். இவர் விடுப்பு எடுத்து விட்டு தனது சொந்த ஊரான திண்டுக்கல்லுக்கு புறப்பட்டார். இதற்காக அவர் சண்டிகாரில் இருந்து மதுரை வரும் எக்ஸ்பிரஸ் ரயிலில் மீரட் சிட்டி ஜங்ஷனில் இருந்து ஏறினார். அந்த ரயில் நேற்று காலை 11:45 மணிக்கு கரூர் ரயில் நிலையம் வந்தடைந்தது.
அப்போது பிச்சைமுத்து பாஸ்கர் திண்டுக்கல் ரயில் நிலையம் என நினைத்து தனது பையை எடுத்துக் கொண்டு அவசர அவசரமாக கீழே இறங்கியுள்ளார். அப்போது அது திண்டுக்கல் ரயில் நிலையம் இல்லை என்பதை தெரிந்து கொண்ட அவர் மீண்டும் ரயிலில் ஏற முயன்றார். அதற்குள் ரயில் அங்கிருந்து புறப்பட்டது. அப்போது நிலைதடுமாறி பிச்சை முத்து பாஸ்கர் ரயிலுக்கும் தண்டவாளத்திற்கும் இடையே சிக்கினார்.
இதனை கண்ட மற்ற பயணிகள் கூச்சலிட்டனர. இதனால் அந்த ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இருப்பினும் ரயில் சக்கரம் பிச்சை முத்து பாஸ்கரின் கழுத்தில் ஏறி இறங்கியதில் அவர் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் ரயில் நிலைய போலீசார் மற்றும் ரயில் நிலைய அதிகாரிகள் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் பிச்சை முத்து பாஸ்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.