குமரி ஆறுகளில் 13 ஆவது நாளாக வெள்ள பெருக்கு - தொடரும் வெள்ள அபாய எச்சரிக்கை.
குமரி மாவட்ட ஆறுகளில் 13 ஆவது நாளாக வெள்ள பெருக்கு ஏற்பட்டதால் தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 25 ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் பெய்த பலத்த மழை காரணமாகவும் தொடர்ந்து மாவட்டத்தின் மலையோர பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகவும் மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகின்றது.
குறிப்பாக 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் தற்போது 43 அடியாகவும் 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் தற்போது 72 அடியாகவும் உள்ளது, இதன் காரணமாக பேச்சிப்பாறை அணையிலிருந்து வினாடிக்கு 470 கன அடி உபரிநீரும் பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 1816 கன அடி உபரிநீரும் திறக்கப்பட்டுள்ளது.
அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதன் காரணமாக பரளியாறு, தாமிரபரணி ஆறு, கோதையாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது, தொடர் வெள்ளப்பெருக்கின் காரணமாக ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.