போதைப்பொருள் கடத்தலில் கணவர் கைது - மனைவி தர்ணா
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக, குமரியில் கணவர் கைது செய்யப்பட்டதால் மனைவி தர்ணாவில் ஈடுபட்டார்.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்ட போலீசார் போதை பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருவதோடு, போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் நபர்களை தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். ஆனால் போலீசார் மேற்கொள்ளும் போதை பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகளில் சம்பந்தம் இல்லாத பலரும் சிக்கி தவிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதனிடையே போதைப்பொருட்கள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நபரின் மனைவி, நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். வாகனம் ஓட்டத் தெரியாத தனது கணவர் அருள்குமார் மீது, வாகனத்தில் போதைப்பொருள் கடத்தியதாக போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவருக்கு வாகனமே ஓட்டத் தெரியாது.
அவரை, நாகர்கோவில் சிறையில் அடைத்துள்ளதாக கூறியும், அது மட்டுமல்லாமல் நாகர்கோவில் சிறையில் தன் கணவரை பார்க்க சென்ற தம்மிடமே போதைப் பொருட்கள் வாங்கி வரச்செய்து மிரட்டி, அதனை பெற்று கொண்ட நாகர்கோவில் சிறைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரியும், அருள் குமாரின் மனைவி கவிதா, கண்ணீருடன் பலமணி நேரம் தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.