நிலம் கையகப்படுத்த வந்த அறநிலையத்துறை அதிகாரிகள் - மக்கள் முற்றுகை
குமரியில், நிலத்தை கையகம் செய்ய வந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை, பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில், உடமூட்டு தர்மம் டிரஸ்ட் இயங்கி வருகிறது. திருச்செந்தூருக்கு மாசி மாதம் காவடி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்ய, இந்த டிரஸ்ட்க்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் இடத்தில், கடைக்கள், வீடுகள் கட்டப்பட்டு, அதில் இருந்து கிடைக்கும் வாடகை வருமானம் மூலம் அன்னதானம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த டிரஷ்டுக்கு சொந்தமான இடம் தங்களுடையது என, 2008 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையதுறையின் ஒரு அங்கமான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் சொத்துக்களை நிர்வகிக்கும், வெள்ளி தாம்பாள அறக்கட்டளை கூறியதாக கூறப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அந்த முயற்சியை கைவிட்ட இந்து சமய அறநிலைய துறை, மீண்டும் கடந்த 2018 ஆம் ஆண்டு சொத்துக்களை கைப்பற்றும் முயற்சியை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், இன்று பார்வதிபுரம் பகுதியில் உள்ள டிரஸ்ட்க்கு சொந்தமான இடங்களை, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கையகம் செய்ய முயன்றனர். அதிகாரிகளின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். நீண்ட நேரம் பொதுமக்களின் போராட்டத்தை தொடர்ந்து, அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ மூலம் பேச்சுவார்த்தைக்கு வர அழைப்பு விடுத்து திரும்பி சென்றனர். இச்சம்பவத்தில் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.