தை அமாவாசை: குமரி முக்கடல் சங்கமத்தில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு வழிபாடு
குமரியில் தை அமாவாசை தர்ப்பணம் செய்து முக்கடல் சங்கமத்தில் பொதுமக்கள் புனித நீராடி வழிபாடு செய்தனர்.
HIGHLIGHTS
முக்கடல் சங்கமிக்கும் ஆன்மீக ஸ்தலமான கன்னியாகுமரி கடலில் ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாளில் முன்னோர்களை நினைத்து பலி தர்ப்பணம் வழிபாடு செய்தால் கர்ம வினைகள் அகன்று புண்ணியம் கிடைக்கும், முன்னோர்களின் ஆசி கிடைக்கும், வாழ்வு வளமாகும் என்பது காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கையாக உள்ளது.
இதனிடையே கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 7 ஆம் தேதி முதல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரைகள், நீர் வீழ்ச்சிகள் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்லவும் பார்வையிடவும் இருந்த தடையை விளக்கிய அரசு பிப்ரவரி 1 ஆம் தேதியான நாளை முதல் கடற்கரைகள் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்ல அனுமதி வழங்கியது.
இந்நிலையில் பல நூற்றாண்டு காலமாக தை அமாவாசை நாளில் நடைபெறும் பலி தர்ப்பணம் நிகழ்ச்சிக்காக இன்று முதல் கன்னியாகுமரிக்கு பொதுமக்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என இந்து இயக்கங்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் இன்று முதல் கன்னியாகுமரி கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து தை அமாவாசை நாளான இன்று முக்கடல் சங்கமிக்கும் ஆன்மீக ஸ்தலமான கன்னியாகுமரியில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
இதற்காக அதிகாலை முதலே கன்னியாகுமரியில் அமைந்துள்ள முக்கடல் சங்கமிக்கும் கடற்கரையில் குவிந்த பொதுமக்கள் அங்கு தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.