மாணவ , மாணவியர்களுக்கு வளரிளம் பருவத்திற்கான சிறப்பு மருத்துவ முகாம்
திருப்புக்குழி ஆரம்ப சுகாதார நிலைய ஆர்பிஎஸ்கே மருத்துவக் குழுவினர், ஐயங்கார்குளம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு முகாம் நடத்தினர்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் அடுத்த ஐயங்கார்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் , மாணவ மாணவியர்களுக்கு வளரிளம் பருவத்திற்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
தேசிய குழந்தைகள் நல வாழ்வு திட்டம் ஏப்ரல் 2015-ஆம் வருடம் மத்திய அரசால் நிறுவப்பட்டது. இத்திட்டத்தின் நோக்கமானது பிறந்த குழந்தை முதல் 18 வயது வரை உள்ள அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்து ஆரம்ப நிலையில் உள்ள நோயினை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதே ஆகும்.
இப்பரிசோதனை நான்கு நிலைகளாக பிரிக்கப்பட்டு மேல் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது. பிறவிக்குறைபாடு, சத்துக்குறைபாடு, நோய்கள், வளர்ச்சிக் குறைபாடு எனப் பிரிக்கப்பட்டு அதன் மூலம் பரிசோதனைகளுக்குப் பின் உரிய மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள திருப்புட்குழி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட ஆர் பி எஸ் கே மருத்துவ குழுவினர் காஞ்சிபுரம் அடுத்த ஐயங்கார்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயிலும் 151 மாணவ மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டனர்.
இதில் மாணவ , மாணவியர்களின் உயரம், ரத்தப் பரிசோதனை, தொழுநோய் கண்டறிதல், கண் பார்வை குறைபாடுகள் கண்டறிதல் மற்றும் பொது மருத்துவம் குறித்து அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதில் மருத்துவர் சையத் சோஜின் அகமத், சமுதாய சுகாதார செவிலியர் கலைவாணி , பகுதி சுகாதார செவிலியர் மங்கையர் திலகம் உள்ளிட்ட குழுவினர் காலை 10 மணி முதல் மாலை இரண்டு மணி வரை மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.