காஞ்சிபுரத்தில் இன்று நிறைவு பெறுகிறது புத்தகத் திருவிழா.. புத்தகங்களை வாங்க மக்கள் ஆர்வம்...
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்கில் கடந்த 23 ஆம் தேதி துவங்கிய புத்தகத் திருவிழா இன்று நிறைவு பெறுகிறது.
HIGHLIGHTS
புத்தக வாசிப்பை இளைஞர்கள் மற்றும் குழந்தைகளிடையே அதிகரிக்கும் வகையிலும், அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், தமிழகத்தில் மாவட்டம் தோறும் புத்தகத் திருவிழா நடைபெறும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். மேலும், அதற்காக பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, பல்வேறு மாவட்டங்களில் புத்தகத் திருவிழா நடைபெற்றது.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் புத்தியைத் தீட்டுவோம் என்ற வாசகத்தை முன்னிறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அண்ணா காவல் அரங்கில் கடந்த 23 ஆம் தேதி புத்தகத் திருவிழா தொடங்கியது. தமிழக சிறு குறு மற்றும் தொழில் நிறுவனங்களின் அமைச்சர் அன்பரசன், மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர், எழிலரசன் மற்றும் மேயர் மகாலட்சுமி யுவராஜ் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டு புத்தகத் திருவிழாவை துவக்கி வைத்தனர்.
23 ஆம் தேதி துவங்கிய புத்தகக் கண்காட்சி இன்று (ஜனவரி 2) இரவுடன் நிறைவு பெறுகிறது. கடந்த பத்து தினங்களாக கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட பல லட்சம் புத்தகங்களை பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினரும் வந்திருந்து ஆர்வத்துடன் புத்தகங்களை வாங்கிச் சென்றனர். நிறைவு நாளான இன்றும் அதிக புத்தகங்கள் விறபனை ஆகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கண்காட்சிக்கு வரும் பொது மக்களை ஊக்குவிக்கும் வகையில் நாள்தோறும் மாலை 6 மணி முதல் 9 மணி வரை பல்வேறு தலைப்புகளின் கீழ் எழுத்தாளர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள், சித்த மருத்துவர் சிவராமன் உள்ளிட்ட எழுத்தாளர்களின் கருத்துரைகளும், பள்ளி கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், பாரம்பரிய கலைகளின் விழாக்களும் நடைபெற்றது.
இந்த நிலையில், புத்தகத் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக இன்று நடைபெறும் நிகழ்ச்சியில், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தலைப்பில் நிகழ்ச்சிகளும் , சமுதாயத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் துணை நிற்பது கலைகளின் வளர்ச்சியே பொருளாதார வளர்ச்சியே என்ற தலைப்பின் கீழ் திண்டுக்கல் லியோனி குழுவினரின் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற உள்ளது.
புத்தகத் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சியில், புத்தகத் திருவிழா சிறப்பாக நடைபெற நன்கொடை அளித்த நன்கொடையாளர்கள் மற்றும் புத்தகத் திருவிழாவில் பங்கேற்று சிறப்பாக பணியாற்றிய துணை அலுவலர்களை பாராட்டி மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி சான்றிதழ்களை வழங்குகிறார். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகரன் கருத்துரை வழங்குகிறார்.
இறுதியில், தென்னிந்திய பதிப்பாளர், வெளியீட்டாளர்கள் சங்க செயலாளர் முருகன் வாழ்த்துரை வழங்குகிறார். மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் புண்ணிய போட்டி நன்றியுடன் புத்தகத் திருவிழா நிறைவு பெறுகிறது...