அரிசி சேமிப்பில் கிடங்கில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி ஆய்வு
நியாய விலைக் கடைகளுக்கு தேவையான அரிசி, பருப்பு , சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் அனுப்பப்படுவது குறித்து ஆய்வு செய்தார்
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படும் விவசாயிகளின் நெல் மூட்டைகள், உத்திரமேரூர் அடுத்த வேடபாளையம் பகுதியில் அமைந்துள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் இருப்பு வைக்கப்படுகிறது.
இதனை நவீன அரிசி ஆலைகள் மூலம் அரிசி உற்பத்தி செய்யப்பட்டு, மீண்டும் அங்கிருந்து மாவட்டத்தில் உள்ள பல்வேறு நியாய விலை கடைகளுக்கு அரிசி, பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களும் நியாய விலை கடைகளுக்கு வேடப்பாளையத்தில் இருந்து அனுப்புவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தரமற்ற அரிசிகள் நியாய விலை கடைகளில் வழங்குவதாக முதல்வரிடம் நேரடியாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான சிறப்பு குழுவினர், அரிசி பருப்பு உள்ளிட்ட பொருள்களின் தரத்தினை உறுதி செய்து, அந்தந்த நியாய விலை கடைக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டனர்.
அவ்வகையில் இன்று வேடபாளையம் பகுதியில் அமைந்துள்ள நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, திடீர் ஆய்வு மேற்கொண்டு அரிசியின் தரம் , இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.மேலும் சிறப்பு குழுவினரிடம் முறையாக ஆய்வு செய்து அனைத்து நியாய விலைக் கடைகளும் பொருட்கள் அனுப்புவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கினார்.