இந்து கடவுளை இழிவுபடுத்தியவரை கைது செய்ய இந்து முன்னணி சார்பில் புகார்
பூஜை பொருட்கள் விற்கும் கடைகாரர் இந்து கடவுளை இழிவுபடுத்தும் விதமாக நடந்ததைத் தொடர்ந்து அவரை கைது செய்ய இந்து முன்னணி புகார்
HIGHLIGHTS
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது சங்குபாணி விநாயகர் திருக்கோயில். இக்கோயில் முன்பு இந்து முன்னணியினர் இன்று விநாயகர் சதுர்த்தி விழாவை தமிழக அரசு கொண்டாட அனுமதிக்க வேண்டும் எனக்கோரி விநாயகர் முன்பு தோப்புக்கரணம் போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது விநாயகர் கோயில் அருகே தேங்காய் பழம் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் பூபதி என்பவர் கடை முன்பு இருந்த ஆணியில் செருப்பை மாட்டி வைத்து அதில் அத்தி வரதர் புகைப்படத்தை சொருகி சிறிய பூமாலை போட்டு வைத்துள்ளார்.
இதனை கண்ட இந்து முன்னணியினர் ஆத்திரம் அடைந்து கடைக்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, இரு தரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டு கடைக்காரரை இந்து முன்னியினர் கடையை தாக்க முயற்சித்தனர். கடையில் இருந்த பூஜை சாமான்கள் அனைத்தும் தூக்கி வீசி, கடைகளை மூடக்கோரி கோஷமிட்டனர்.
சம்பவம் குறித்து அறிந்த காவல்துறை உடனடியாக அப்பகுதிக்கு வந்து இந்து முன்னணியை சமாதானப்படுத்தி பூபதியை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். பூபதி நடத்திவரும் கடை அப்பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ளது எனவும் அதை உடனடியாக பெருநகராட்சி அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
பூபதி கடந்த சில மாதங்களாகவே மனநிலை சரியில்லாத நிலையில் இருந்துள்ளார். இவரது மனைவி மற்றும் கடைக்கு பூஜை பொருள் வாங்க வருவோரிடம் பூபதி சண்டையிடுவது வாடிக்கையாக இருந்து வந்ததார் என்றும் தெரியவந்துள்ளது.