மயிலை ஆதீனத்திற்கு சொந்தமான 48 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்பு
காஞ்சிபுரம் செங்கல்வராயன் ஒத்தவாடை தெரு பகுதியில் ஹரிதாஸ் என்பவர் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த 1218 சதுர அடி இடம் மீட்கப்பட்டது
HIGHLIGHTS
காஞ்சிபுரம் செங்கல்வராயன் ஒத்தவாடை தெரு பகுதியில் உள்ள மயிலம் பொம்மபுரம் ஆதீன மடத்துக்கு சொந்தமான ரூ.48 லட்சம் மதிப்பிலான சொத்து அறநிலையத்துறை அதிகாரிகள் மூலமாக மீட்கப்பட்டது.
கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பல நூற்றுக்கணக்கான திருக்கோயில்கள் அமைந்துள்ளது. மேலும் இத் திருக்கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் இடங்கள் என சென்னை உள்பட பல்வேறு இடங்களில் அமைந்துள்ளது.
இந்த சொத்துக்களுக்கு அடிமனை வாடகை நிர்ணயத்தை இந்து சமய அறநிலையத்துறை வசூலித்து வந்து வந்தது. இது போன்ற குடியிருப்பு வாசிகள் பல மாதங்கள் , வருடங்களாக நிலுவை வைத்துள்ளனர்.
இதுபோன்று தமிழகத்தில் உள்ள பல்வேறு மடங்களுக்கும் சொந்தமான சொத்துக்களும் தமிழகம் முழுவதும் உள்ள நிலையில் அதனையும் ஆக்கிரமித்து திருப்பி ஒப்படைக்காத நிலை இருந்து வருகிறது.
அவ்வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மயிலம் பொம்மபுரம் ஆதீனம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் திருமடம் காஞ்சிபுரம் கிளைக்கு சொந்தமான இடம் காஞ்சிபுரம் செங்கல்வராயன் ஒத்தவாடை தெரு பகுதியில் இருந்தது.1218 சதுர அடி அளவுள்ள ரூ.48லட்சம் மதிப்புள்ள இந்த இடத்துக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை கொடுக்காமலும், இடத்தை ஆக்கிரமித்து ஹரிதாஸ் என்பவர் இருந்து வந்துள்ளார்.
இது தொடர்பாக விழுப்புரம் சரக அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன் சொத்தை மீட்குமாறு ஆலய நிர்வாகங்கள் பிரிவு தனி வட்டாட்சியர் ராஜனுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து அறநிலையத்துறை காஞ்சிபுரம் சரக உதவி ஆணையர் லட்சுமி காந்த பாரதிதாசன் தலைமையில் செயல் அலுவலர்கள் தியாகராஜன், அமுதா, பூவழகி, ஆய்வாளர் பிரித்திகா மற்றும் காவல்துறையினர் உதவியுடன் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை ஹரிதாஸிடமிருந்து மீட்டு பூட்டி சீல் வைத்தனர்.
இதனையடுத்து ஜேசிபி இயந்திரம் மூலம் அந்த சொத்தை இடித்து தரைமட்டமாக்கினார்கள். இந்நிகழ்வின் போது மயிலம் பொம்மபுரம் ஆதீனத்தின் அதிகாரம் பெற்ற அலுவலர் ராஜீவ்குமார் ராஜேந்திரன், மேலாளர் சந்தானம், காஞ்சிபுரம் வட்டாட்சியர் புவனேசுவரன், துணை வட்டாட்சியர் ஹரி ஆகியோர் உட்பட பலரும் உடன் இருந்தனர்.