அப்போ குடிநீர் குளம் ! இப்போ கழிவுநீர் குளம்... மாறுமா அவலம்?
திருபத்திகுன்றம் கிராம ஊராட்சியில் எல்லையம்மன் கோயில் அருகே குடிநீர் குளம் நாளடைவில் கழிவுநீர் குளமாக மாறியுள்ளதால் குடிநீர் ஆதாரம் கேள்விகுறியாகியுள்ளது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது திருப்பருத்திகுன்றம் கிராம ஊராட்சி. காஞ்சிபுரம் புறநகர் வளர்ச்சியில் இப்பகுதி சிறந்த தேர்வாக பொதுமக்களால் தேர்வு செய்து, விரிவாக இப்பகுதி வளர்ந்து வருகிறது. கிராம ஊராட்சியில் திருப்பதிகுன்றம் - கீழ்கதிர்பூர் சாலையில் எல்லையம்மன் கோயில் அருகே மிகப் பெரிய திருக்குளம் உள்ளது.
அக்காலத்தில் பெரும் குடிநீர் ஆதாரமாகவும் பொதுமக்கள் குடிநீர் பயன்பாட்டிற்கு பெரிதும் இக்குளம் இருந்த நிலையில், தற்போது மெல்ல மெல்ல குளம் குறுகி, கழிவுநீர் கூடமாக மாறி வருவதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
தற்போது இக்குளத்தில் நாள்பட்ட தேங்கும் நீரின் நிறம் மாறி, கழிவு நீரும் கலந்து பூமியில் தேங்குவதால், குளக்கரை மேல் சிறிய ஆழ்துளை கிணறு நீர் பயன்படுத்த முடிவதில்லை. கிராம ஊராட்சி இக்குளத்தை சீர் செய்து நல்ல குடிநீர் ஆதாரமாக மாற்ற வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.