காஞ்சியில் கொரோனா விதிமீறல்: 11 பட்டு மையங்களுக்கு அபராதம்
காஞ்சிபுரம் பட்டு சேலை விற்பனை நிலையங்களுக்கு கொரோனா விதிமுறை மீறியதாக ரூ.5ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
சுபமுகூர்த்த தினமான நேற்று பட்டு நகரம் காஞ்சிபுரத்தில் காந்தி சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் பட்டு சேலை வாங்குவதற்காக அதிக அளவில் மக்கள் குவிந்தனர்.
இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சமூக இடைவெளி, முகக் கவசங்கள் அணிந்த பின்புதான் வணிக நிறுவனங்களுக்குள் செல்லவேண்டும் என அறிவுறுத்தியும் அதை கடைப்பிடிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டிருந்தது.
பல்வேறு பட்டு சேலை நிறுவனங்களில் மக்கள் கூட்டம் அலை மோதுவதால் கொரோனா பரவல் அதிகரிக்கும் என செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து அப்பகுதியில் துணை ஆட்சியர் மற்றும் காஞ்சிபுரம் பெரு நகராட்சி ஆணையர் தலைமையிலான குழுவினர் அப்பகுதியில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது முறையாக கொரோனா தடுப்பு நடவடிக்கை விதிகளை கடைப்பிடிக்காத 11 வணிக நிறுவனங்களுக்கு தலா ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோன்று தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டால் நிறுவனங்கள் மூடி சீல் வைக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது.