வரதராஜ பெருமாள் கோயிலில் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி
பெருமாள் கார்த்தியை ஒட்டி சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ தேவராஜ சுவாமி கொடி மரம் அருகே எழுந்தருளி சொக்கப் பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது
HIGHLIGHTS
காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் பெருமாள் திருகார்த்திகையை ஒட்டி சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சியில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ தேவராஜசாமி எழுந்தருளி கலந்து கொண்டு நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கார்த்திகை பௌர்ணமி அன்று திருக்கார்த்திகை தீபம் கொண்டாடப்படும். அந்நாளில் திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருக்கார்த்திகை தீபம் மலை உச்சியில் ஏற்றப்பட்டு லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து மறுநாள் பெருமாள் கார்த்திகை என கூறப்படும். அனைத்து வைணவ ஆலயங்களிலும் பெருமாள் கார்த்திகை சொக்கப்பனை ஏற்றும் விழா சிறப்பாக நடைபெறும்.
அவ்வகையில் அத்திவரதர் புகழ்பெற்ற ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் இன்று மாலை 6 மணி அளவில் சொக்கப்பனை ஏற்று நிகழ்வு நடைபெற்றது.
முன்னதாக மலையில் இருந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ தேவராஜ சுவாமி கண்ணாடி அறை அருகில் எழுந்தருளிய நிலையில் அவருக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கோயில் கொடிமரம் அருகே தேவராஜசுவாமி எழுந்தருள 30 அடி உயரமுள்ள சொக்கபனை ஏற்றப்பட்டு பட்டாசுகள் வெடித்து பெருமாள் கார்த்திகை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேவராஜ சுவாமியை தரிசித்தும் சொக்கப்பனை நிகழ்வை கண்டு ரசித்தனர்.
அதனைத் தொடர்ந்து தேவராஜ சுவாமி இரண்டு திருக்குடைகளுடன் கம்பீரமாக நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பார்த்தார்.
வீடுகள் தோறும் பக்தர்கள் விளக்கேற்றி பெருமாள் கார்த்திகையன்று சாமி தரிசனம் மேற்கொண்டனர்.