100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு : கையாடல் பணத்தை செலுத்த அறிவுரை
ஆற்பாக்கம் ஊராட்சியில் 100நாள் வேலையில் முறை கேடாக பயனாளிகளுக்கு அளித்த 29ஆயிரம் பணத்தை திரும்ப வசூல் செய்து கட்ட தணிக்கை குழு உத்தரவிட்டுள்ளது.
HIGHLIGHTS
கிராமப்புற மக்கள் தங்கள் வாழ்வாதரத்தினை மேம்படுத்தி கொள்ள கிராமங்களில் நடைபெறும், நலதிட்ட பணிகள் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்டங்களில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் கீழ் ஆண்டிற்கு 100 நாள் வேலை வாய்ப்பினை அளித்து வருகிறது.
இதை கண்காணிக்க ஊராட்சி செயலர், பணிகள் பொறுப்பாளர் , ஓன்றிய கண்காணிப்பாளர் என பலர் தினந்தோறும் பணிகளில் பயன்பெறும் பயணாளிகளின் வருகை பதிவு மூலம் வருகையை பதிவு செய்து வருகின்றனர்.
பல கிராம ஊராட்சிகளில் தனியார் தொழிற்சாலை , கடைகளுக்கு வேலைக்கு செல்லும் பெண்கள் கூட பணிபுரிந்து வருவதாகவும், அவர்கள் வேலைக்கு வராமலேயே வந்ததாக வருகைப் பதிவு செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்து வந்தது..
இந்நிலையில் காஞ்சிபுரம் ஓன்றியம், ஆற்பாக்கம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 2019 20 ஆம் நிதி ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கான ஆவணங்ளை கிராம ஊராட்சி வல்லுனர்கள் தணிக்கை ஆய்வு செய்தபோது பல்வேறு குளறுபடிகள் தெரியவந்துள்ளது.
இதில் தனிநபர் உறிஞ்சி குழி அமைக்கப்பட்டதாக கூறப்பட்ட இடத்தில் பணி நடைபெற்றமைக்கான எந்தவித சுவடும் இல்லை. எனவே அதற்கான தொகை ரூபாய் 7 ஆயிரத்து 930 அவரிடமிருந்து திரும்ப பெற்று அரசு கணக்கில் செலுத்தப்பட வேண்டும்.
இதேபோல் ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிகளுக்கான ஆவணங்களை கிராம ஊராட்சி வல்லுனர்கள் ஆய்வு செய்தபோது வருகைப்பதிவு இல்லாத நபருக்கு பணி செய்த நாட்களை விட கூடுதலாக கணக்கிட்டு பரிவர்த்தனையில் ஊதியமாக வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது.
அவ்வகையில் ரூ 2996, ரூ7451, ரூ5954, ரூ5029 என நான்கு பிரிவுகளில் கொடுக்கப்பட்ட பணத்தினை பயனாளிகளிடம் இருந்து திரும்பப் பெற்று அரசுக்கு செலுத்த அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்த விளக்க நோட்டீஸ் கிராம ஊராட்சி மன்ற அலுவலகம் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.
ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், கிராம ஊராட்சி மன்ற தலைவர், கிராம ஊராட்சி செயலர்கள், பணித்தள பொறுப்பாளர்கள் என பலரும் கண்காணிக்கும் நிலையில் இந்த தவறுகள் நடைபெறுவது வருத்தமளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.