காஞ்சிபுரம் அருகே பேருந்தும் சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து
காஞ்சிபுரம் அடுத்த கருப்பட்டிடத்தட்டை பகுதியில் ஏற்பட்ட நேருக்கு நேர் மோதலில் சுற்றுலாப் பயணிகள் 6 பேர் காயமடைந்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
HIGHLIGHTS
கோயில் மற்றும் சுற்றுலா நகரமான காஞ்சிபுரத்தில் சனி மற்றும் ஞாயிறு தொடர் விடுமுறை காரணமாக, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வெளிமாநில சுற்றுலாப் பயணிகளும், பிற மாவட்டத்தை சேர்ந்த பயணிகளும் அதிக அளவில் வருகை புரிந்து வருகின்றனர்.
மேலும் ஞாயிறு அன்று திருமண முகூர்த்த நாள் என்பதால் அதிக அளவில் வெளியூரிலிருந்து கார் மற்றும் பெண்கள் மூலம் காஞ்சிபுரத்தில் நடைபெறும் திருமணத்திற்கு வந்து செல்வதால் நேற்று மாலை முதலே நகரில் கடும் போக்குவரத்து நிலவியது.
இந்நிலையில் நேற்று மதியம் முதல் காஞ்சிபுரத்தில் வட கிழக்குப் பருவமழை இடியுடன் துவங்கி கனமழை அவ்வப்போது பெய்து வந்தது. இரவு ஒன்பது மணிக்கு மேல் குளிர்ந்த காற்றுடன் லேசான சாரல் மழை பெய்து வந்த நிலையில் காஞ்சிபுரம்- அரக்கோணம் நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே அமைந்துள்ள கருப்படிதட்டடை கிராம பகுதியில் உள்ள தனியார் பேருந்து பணிமனைக்கு சென்ற தனியார் பயணிகள் பேருந்து சென்றுள்ளது.
அப்போது ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து 11பேரை ஏற்றி கொண்டு அரக்கோணம் வழியாக காஞ்சிபுரம் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த வேன் எதிர்பாராத விதமாக தனியார் பேருந்து மீது மோதி விபத்திற்கு உள்ளானது. விபத்தில் வேனில் வந்த ஆந்திரா சுற்றுலாப் பயணிகள் ஆறு பேர் காயமடைந்ததனர்.
இதை கண்ட அவ்வழியே சென்றவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தாலுக்கா காவல் நிலைய போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மீதமுள்ள சுற்றுலாப் பயணிகளை பத்திரமாக மீட்டு பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.
காஞ்சிபுரம் அரக்கோணம் சாலையில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருவதும், கடந்த இரண்டு நாட்களாக காஞ்சிபுரம் பலத்த மழை பெய்து வரும் நிலையில் இருசக்கர வாகனங்களில் வரும் நபர்கள் விபத்துகளை சந்திப்பதுமாக இருந்து வந்த நிலையில், சுற்றுலாப் பயணி வேன் சாலை விரிவாக்க பணி குறித்து அறியாததால் இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
காஞ்சிபுரம்- அரக்கோணம் சாலை நான்கு வழி சாலையாக மாற்றும் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் சாலைகளின் குறுக்கே கல்வெட்டு அமைக்கும் பணியும் நடைபெறுகிறது. இந்த நிலையில் அதற்கான அறிவிப்பு பலகை பல இடங்களில் இல்லாததும் வேகமாக வந்து கொண்டிருப்பவர்கள் திடீரென இது கண்டு அஞ்சி விபத்தில் சிக்கி வருவது வாடிக்கையாக உள்ளது. எனவே அப்பகுதிகளில் போதிய எச்சரிக்கை பலகை மற்றும் விபத்து நடக்கும் இடம் என அறிவிப்பு பலகைகளை ஒப்பந்தப் பணித்துறைகள் இதனை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.