காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் எழுத உதவியாளர்கள் நியமனம்
தரகர்கள் தலையீட்டை தவிர்க்க காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் எழுத உதவியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக எழுதி கலெக்டர் மற்றும் பிற அலுவலரிடம் நேரடியாக அளித்து அதில் தீர்வு காணுவது வழக்கம். அந்த வகையில் பெரும்பாலான மக்கள் மனுக்களை எழுதுவதில் சிரமம் ஏற்பட்டு வளாகத்தில் உள்ள வெளி ஆட்கள் மூலம் மனு எழுத கட்டணம் செலுத்தி மற்றும் மனு தரகர்களாக செயல்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியவந்தது.
இதை முற்றிலும் தவிர்க்கும் நோக்கில் கலெக்டர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், திங்கள் கிழமைகளில் கோரிக்கை மனுக்களை வழங்க வரும் பொதுமக்கள் மனுக்களை எழுத சிரமப்படுவதை கருத்தில் கொண்டும், தரகர்களின் தலையீட்டை தவிர்ப்பதற்காகவும், கட்டணம் ஏதுமின்றி மனுக்களை எழுதுவதற்கு ஏதுவாக உதவியாளர்களை நியமித்து மாவட்ட நிர்வாகத்தினரால் காஞ்சிபுரம் மக்கள் நல்லுறவு மையத்தின் அருகில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எழுத படிக்க தெரியாத பாமர மக்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் மனுக்கள் எழுத தரகர் மற்றும் தனி நபர்களையும் நாடாமலும் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.