வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார்: கள்ளக்குறிச்சி ஆட்சியர்
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைத்து ஆயத்தமாக உள்ளதாக, கலெக்டர் ஶ்ரீதர் கூறினார்.
HIGHLIGHTS
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம் தேவபாண்டலம் மற்றும் ஆரூர் கிராமத்திற்குட்பட்ட பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள ஏரிகள் முழு கொள்ளளவு அடைந்துள்ளன. இதை தொடர்ந்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என் ஸ்ரீதர் இன்று ஆய்வு செய்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர்தெரிவித்ததாவது: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. சங்கராபுரம் வட்டம் தேவபாண்டலம் ஏரி முழு கொள்ளளவை அடைந்துள்ளது. மிகை நீர் வெளியேறுவது தொடர்பாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.
பாண்டலம் ஏரி முழு கொள்ளளவை அடைந்து உபரி நீர் வெளியேறுவதால் 153 ஹெக்டேர் விவசாய நிலம் பாசன வசதி பெற்று பயன்பெறுகிறது. ஏரியின் உபரிநீர் வெளியேறும் பாசன வாய்க்கால் மற்றும் வாய்க்கால்களின் கரைகள் விளை நிலங்களில் தண்ணீர் புகாதவாறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஆரூர் கிராமத்தில் உள்ள ஏரி, முழு கொள்ளவை அடைந்து உபரி நீர் வெளியேறுவதால் 39 ஹக்டெர் விவசாய நிலம் பாசன வசதி பெற்று பயன்பெறுகிறது. இந்த ஏரியிலிருந்து வெளியேறும் மிகை நீரினால் பாதிப்பு ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதனால் ஏரிகள் மற்றும் நீர் நிலைகள் தொடர் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள, அனைத்து துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, பொதுப்பணித்துறை அலுவலர்கள், சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சங்கராபுரம் வட்டாட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.