பொங்கல் பண்டிகை: ஈரோட்டில் இருந்து நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
பொங்கல் பண்டிகையையொட்டி, நாளை ஜன 12 முதல் 18ம் தேதி வரை ஈரோட்டில் இருந்து பல்வேறு ஊா்களுக்கு 300 சிறப்புப் பேருந்துகளை அரசு போக்குவரத்துக் கழகம் இயக்கவுள்ளது
HIGHLIGHTS
பொங்கல் பண்டிகையையொட்டி, பொதுமக்கள் வசதிக்காக நாளை வெள்ளிக்கிழமை (ஜனவரி 12) முதல் வருகிற 18ம் தேதி வரை ஈரோட்டில் இருந்து பல்வேறு ஊா்களுக்கு 300 சிறப்புப் பேருந்துகளை அரசு போக்குவரத்துக் கழக ஈரோடு மண்டலம் இயக்கவுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ளன. ஈரோட்டில் பணி நிமித்தமாக தங்கி இருப்போர், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் பொங்கல் பண்டிகையை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
அவர்களின் வசதிக்காக ஒவ்வொரு ஆண்டும் அரசு போக்குவரத்துக் கழக ஈரோடு மண்டலம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் இந்த ஆண்டும் ஈரோட்டில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் நாளை 12ம் தேதி முதல் 7 நாட்களுக்கு இயக்கப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஈரோடு மண்டல பொதுமேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வருகின்ற தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஈரோடு மண்டலத்தின் சார்பில் பயணிகளின் வசதிக்காக நாளை வெள்ளிக்கிழமை 12ம் தேதி முதல் 18ம் தேதி முடிய ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து கோவை, மதுரை, சென்னை, திருச்செந்தூர், இராமேஸ்வரம், நாகர்கோவில், திருநெல்வேலி, திருச்சி, பழனி, சேலம், நாமக்கல், கரூர், சத்தி மற்றும் ராசிபுரம் ஆகிய ஊர்களுக்கு 300 பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் அதற்கு ஏற்றவாறு பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.