சத்தியமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
HIGHLIGHTS
சத்தியமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புளியங்கோம்பை கட்டபொம்மன் நகரை சேர்ந்த சிறுவன் பிரவீன் (14). இவர் அரசு உதவி பெறும் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளிக்கு செல்லும் நேரம் தவிர தாயாருடன் சேர்ந்து மளிகை கடையில் வேலை செய்து வந்தார்.
தற்போது கோடை விடுமுறை என்பதால், இன்று (திங்கட்கிழமை) காலை வழக்கம்போல கடையை திறந்துள்ளார். கடையில் இருந்த மின் சுவிட்சை தொட்டபோது, மின்வயரில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக பிரவீன் உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில், தூக்கி வீசப்பட்ட பிரவீன் காயத்துடன் உயிருக்கு போராடினான்.
அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே பிரவீன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.