/* */

ஈரோடு மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Farmers Grievance Day ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
X

ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட படம்.

Farmers Grievance Day

ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (இன்று) நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கான மாதாந்திர குறைகேட்பு கூட்டம், ஈரோடு மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை தாங்கி, விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் அதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

பின்னர், இக்கூட்டத்தில் ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்ததாவது:- 2023-24-ஆம் ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டமானது தேர்வு செய்யப்பட்ட 42 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டது. இந்த ஊராட்சிகளில் உள்ள தரிசு நிலங்கள் கண்டறியப்பட்டு அவற்றை சாகுபடிக்கு கொண்டுவந்து உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வேளாண்மைத்துறையின் மூலம் தரிசு நிலத்தொகுப்புகள் கண்டறியப்பட்டு அவற்றில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் பொருட்டு நிலத்தடி நீர் ஆய்வு செய்யப்பட்டு ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து, நுண்ணீர் பாசன அமைப்பை நிறுவி பயிர்சாகுபடிக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கீழ்பவானி ஆயக்கட்டு பாசன பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட நெல் முதிர்ச்சியடைந்து அறுவடைக்கு தயாராக உள்ள பகுதிகளில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

Farmers Grievance Day


அறுவடையைப் பொறுத்து தேவைக்கேற்ப கூடுதல் நேரடி கொள்முதல் நிலையங்களை திறந்து நெல் கொள்முதல் பணிகள் மேற்கொள்ளப்படும். தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசன பகுதிகளுக்கு நெல் சாகுபடிக்காக நீர் திறக்கப்பட்டு தற்போது நடவு பணிகள் நடைபெற்று வருகிறது. விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள வட்டார மற்றும் துணை வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன விவசாயிகள் இவற்றைப் பெற்று பயன்பெறலாம். மேலும் விவசாயிகளுக்கு தேவையான பூச்சி மருந்துகள் மற்றும் இரசாயன உரங்கள் போதுமான அளவு தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், வேளாண்மை இணை இயக்குநர் வெங்கடேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்தாமணி, செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல்) விஸ்வநாதன், துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) மகாதேவன், துணை இயக்குநர் (தோட்டக்கலை) மரகதமணி, செயலாளர்/துணை இயக்குநர் (ஈரோடு விற்பனைக்குழு) சாவித்திரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 29 Dec 2023 11:15 AM GMT

Related News