எச்சில் துப்பியதால் ஆத்திரம் : கொலை வழக்கில் கைதான வாலிபர் வாக்குமூலம்
ஈரோட்டில், மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் தலை மீது கல்லை போட்டு எரித்துக் கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
HIGHLIGHTS
ஈரோடு கருங்கல்பாளையம், நஞ்சப்பா நகர் காவிரி கரையில் உள்ள மயானம் பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்ட நபரான அசேன் சேட்டு (52) என்பவர, மர்மநபர்கள் தலையில் கல்லை தூக்கிபோட்டும், எரித்தும் கொடூரமாக கொலை செய்தனர். இக்கொலை சம்பவம் தொடர்பாக கருங்கல்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடிவந்தனர்.
இந்நிலையில், கொலை தொடர்பாக ஈரோடு ஆர்.என்.புதூர், அமராவதி நகரை சேர்ந்த கந்தசாமி மகன் பிரகாஷ்(36) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், பிரகாஷ் ஈரோட்டில் பழைய இரும்பு கடையில் லோடுமேனாக வேலை செய்து வருவதும், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, இறந்த அசேன்சேட்டு மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், பிரகாஷின் முகத்தில் எச்சில் துப்பிய காரணத்தால் முன்விரோதம் இருந்து வந்துள்ளதும் தெரியவந்தது.
நேற்று முன்தினம் இரவு, நஞ்சப்பா நகரில் நடந்து சென்று கொண்டிருந்த அசேன்சேட்டுக்கும், பிரகாஷ்க்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த பிரகாஷ், அசேன்சேட்டு தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு அடையாளம் தெரியாமல் இருக்க அவரது உடலை அருகிலிருந்த துணிகளை கொண்டு எரித்தாக வாக்குமூலம் அளித்துள்ளார். கைது செய்யப்பட்ட பிரகாஷை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.