ஈரோடு ஜவுளி சந்தை: சில்லறை வியாபாரம் அதிகரிப்பு
ஈரோடு ஜவுளி சந்தையில் இந்த வாரம் சில்லறை வியாபாரம் அதிகமாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்
HIGHLIGHTS
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே ஜவுளி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு 280 தினசரி கடைகள், 740 வாரசந்தை கடைகள் செயல்படுகின்றன. மற்ற இடங்களைக் காட்டிலும் இங்கு ஜவுளிகள் குறைந்த அளவுக்கு விற்கப்படுவதால் இங்கு எப்போதும் பொது மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படும்.
குறிப்பாக இங்கு நடைபெறும் வரை சந்தை உலகப் புகழ் பெற்றது. திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை ஜவுளி சந்தை நடைபெறும்.
இதற்காக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் மொத்தமாக வந்து துணிகளை கொள்முதல் செய்து செல்வார்கள்.
இந்த வாரம் நடைபெற்ற சந்தைக்கு, கர்நாடகாவில் பலத்த மழை காரணமாக அந்த மாநில வியாபாரிகள் வரவில்லை. அடுத்த மாதம் ஓணம் பண்டிகை வருவதால், கேரளாவிலிருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். அதிக எண்ணிக்கையில் வியாபாரிகள் சந்தைக்கு வந்திருந்ததால், சில்லறை வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது.
இந்த வாரம் 35 சதவீதம் அளவிற்கு சில்லறை வியாபாரம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.