சென்னிமலை முதலைமடை கீழ்பவானி வாய்க்காலில் இருந்து ஓடை வழியாக தண்ணீர் திறப்பு
Erode news, Erode news today-ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ள முதலைமடை பகுதியில் கீழ்பவானி வாய்க்காலில் இருந்து ஓடை வழியாக தண்ணீர் திறக்கப்பட்டதால் தரைப்பாலம் மூழ்கியது.
HIGHLIGHTS
Erode news, Erode news today - ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள முதலைமடை பகுதியில், கீழ்பவானி வாய்க்காலில் இருந்து ஓடை வழியாக, தண்ணீர் திறக்கப்பட்டதால் 4 தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கியது.
பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி வாய்க்காலில் கடந்த 1ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து, பாசனப் பகுதி விவசாயிகள் நெல் நடவு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாள்களாக ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதையடுத்து, ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே அய்யம்பாளையம் பகுதியில் உள்ள முதலைமடை என்ற இடத்தில், கீழ்பவானி வாய்க்காலில் இருந்து 50 சதவீத் தண்ணீர் ஓடை வழியாக நேற்று முன்தினம் வெளியேற்றப்பட்டது. அவசர காலங்களில் கீழ்பவானி வாய்க்காலில் இருந்து மாற்று வழியில் தண்ணீர் திறந்துவிட முதலைமடை பகுதியில் வாய்க்காலின் குறுக்கே ஷட்டர் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, இவ்வழியாக வெளியேற்றப்படும் தண்ணீர், ஜெ.ஜெ.குட்டைக்கு சென்று அந்த குட்டை நிரம்பிய பின் அங்குள்ள ஓடை வழியாகச் சென்று நொய்யல் ஆற்றில் கலக்கிறது.
தற்போது கீழ்பவானி வாய்க்காலில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் ஓடையில் அதிக அளவில் செல்வதால் மேட்டூர்-எல்லக்குமாரபாளையம் தரைப்பாலம், மேட்டூர்-சொக்கநாதபாளையம் தரைப்பாலம், மேட்டூர்-கரைப்புதூர்தரைப்பாலம் மற்றும் சாளைக்காடு-சொக்கநாதபாளையம் தரைப்பாலம் ஆகிய 4 இடங்களில் தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கின. மேலும், ஓடையின் அருகில் உள்ள நெல் வயல்களும் தண்ணீரில் மூழ்கின. இதுகுறித்து பொதுப்பணித்துறை பணியாளர்கள் கூறுகையில், கடைமடை பகுதியில், விளைநிலங்களில் தண்ணீர் புகுந்து விடாமல் இருக்க விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கீழ்பவானி வாய்க்காவில் செல்லும் 50 சதவீதம் தண்ணீர் முதலைமடை ஓடை வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. விரைவில் வழக்கம்போல கீழ்பவானி வாய்க் காலில் தண்ணீர் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.
இதுகுறித்து, கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ரவி கூறுகையில், பொதுப்பணித்துறையின் தவறான நீர் நிர்வாகமே இதற்கு காரணம். அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவை குறைத்து திறந்துவிட்டாலே இப்பிரச்னையை சமாளிக்க முடியும். ஆனால், பரவலாக அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து வரும் நிலையில், அவசரத் திறப்புப் பகுதியான முதலைமடை ஷட்டரை திறந்து தண்ணீரை வெளியேற்றி இருப்ப தால் அந்த நீர் யாருக்கும் பயனின்றி நொய்யல் ஆற்றில் கலந்து வீணாகிறது. மேலும், இந்த தண்ணீர் செல்லும் பாதையில் உள்ள 4 தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியும். ஓடையோரம் உள்ள விளை நிலங்களில் தண்ணீர் தேங்கியும் இப்பகுதி நெல் வயல்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.எவ்வளவு முறை கோரிக்கை விடுத்தாலும், பொது பணித்துறையினர் முறையான நீர் நிர்வாகத்தை கடைப்பிடிக்க மறுக்கின்றனர். இவ்வாறான நடவடிக்கையால் யாருக்கும் பயனின்றி தண்ணீர் வீணாகி வருகிறது, என்றார்.