/* */

வடகிழக்கு பருவமழை: தோட்டக்கலைப் பயிர்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

வடகிழக்கு பருவமழை காலத்தில் தோட்டக்கலைப் பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

HIGHLIGHTS

வடகிழக்கு பருவமழை: தோட்டக்கலைப் பயிர்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
X

பைல் படம்.

தருமபுரி மாவட்ட விவசாயிகள் எதிர்வரும் வடகிழக்கு பருவமழை காலத்தில் தோட்டக்கலைப் பயிர்களை பாதுகாக்க கீழ்க்காணும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தவறாது கடைப்பிடித்திட மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பசுமைக்குடில்:

பசுமைக்குடில் அடிபாகத்தை பலமாக நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் இணைக்க வேண்டும். பசுமைக்குடிலின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் பத்திரமாக மூடி உள்பகுதியில் காற்று புகாமல் பாதுகாக்க வேண்டும். அருகில் மரங்கள் இருப்பின் அதன் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். பசுமைக்குடிலின் கட்டுமானத்தினுள் ஏதேனும் கிளிப்புகள் இருப்பின் அவற்றை மாற்ற வேண்டும்.

நிழல்வலைக்குடில்:

கிழிந்து போன நிழல்வலைகளை தைத்து சரி செய்ய வேண்டும். நிழல்வலைக்குடிலின் அடிப்பாகம் பலமான நிலத்துடன் இணைப்பு கம்பினால் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

பொதுவாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் :

அறுவடைக்கு தயாராக இருக்கும் தோட்டங்களில் அறுவடை மேற்கொண்டு மரத்தின் சுமையை குறைக்கலாம். வடிகால் வசதி அற்ற நிலங்களில் ஆங்காங்கே வடிகால் வாய்க்கால் அமைத்து மழைநீர் தேக்கத்தை தவிர்க்கலாம். கனமழை காரணமாக ஏற்பபடும் மழைநீர் தேக்கத்தை குறைக்க உபரி நீர் வடிந்த பின் நடவு / விதைப்பு பணிகளை மேற்கொள்ளலாம். காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க காற்று வீசும் திசைக்கு எதிர்திசையில் குச்சிகளால் முட்டுகொடுத்து செடிகள் சாயாவண்ணம் பாதுகாக்கலாம். மரங்களை சுற்றி மண் அணைத்து பாதுகாப்பு கொடுக்கலாம். மழைநீர் வடிந்த பின் பயிர்களுக்கு ஏற்றவாறு மேல் உரம் இட்டு மண் அணைக்கலாம். மேலும் இலைவழி உரம் கொடுத்து பயிரின் ஊட்டச்சத்து தேவையை நிவர்த்தி செய்யலாம். தோட்டக்கலை பயிர்களான வாழை, மரவள்ளி, வெங்காயம், வெண்டை , தக்காளி, கத்தரி போன்ற பயிர்களுக்கு உரிய காலத்தில் பயிர் காப்பீடு செய்ய வேண்டும்.

மா /கொய்யா /எலுமிச்சை /பலா :

காய்ந்த மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்றிட வேண்டும். மரங்களின் எடையை குறைக்கும் வகையில் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். மரத்தின் அடிப்பகுதியில் மணி அணைத்து தண்டுப் பகுதியில் மண்ணை குவித்து வைத்தல் வேண்டும். தோட்டத்தில் தேவையான வடிகால் வசதி செய்திட வேண்டும். நோய்த்தடுப்பு மருந்துகள் தூர்ப்பகுதியில் நனையும்படி தெளிக்க வேண்டும். இளம் செடிகள் காற்றினால் பாதிக்கா வண்ணம் தாங்கு குச்சிகள் கொண்டு கட்ட வேண்டும். கனமழை காற்று முடிந்தவுடன் மரங்களில் பாதிப்பு இருப்பின் உடனடியாக வேர் பகுதியை சுற்றி மண் அணைக்க வேண்டும். மரங்களுக்கு தேவையான தொழுஉரம் இட வேண்டும்.

வாழை :

காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மரத்தின் அடியில் மண் அணைத்தல் வேண்டும். கீழ்மட்ட இலைகளை அகற்றிவிட்டு மரத்தின் அடியில் மண் அணைத்தல் வேண்டும். சவுக்கு அல்லது யூகலிப்டஸ் கம்புகளை ஊன்றுகோலாக பயன்படுத்தி முட்டுகொடுக்க வேண்டும். மரங்களை சுற்றிலும் சுத்தப்படுத்தி நல்ல வடிகால் வசதி அமைக்க வேண்டும். வாழைத்தார்களை முறையாக மூடிவைத்தல் வேண்டும். 75 சதவீதத்திற்கு மேல் முதிர்ந்த தார்களை அறுவடை செய்தல் வேண்டும்.

மேற்கண்ட வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து விவசாயிகளும் கடைப்பிடித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி தெரிவித்துள்ளார்.

Updated On: 12 Oct 2022 4:04 AM GMT

Related News