/* */

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: காவிரியில் நீர்வரத்து 4,000 கனஅடி

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

HIGHLIGHTS

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: காவிரியில் நீர்வரத்து 4,000 கனஅடி
X

கோப்பு படம் 

காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறக்கப்படும் தண்ணீரை கடந்த நவம்பர் மாதத்திலிருந்து கர்நாடக அரசு நிறுத்தி வைத்துள்ளது. கடந்த ஆண்டு பெய்த மழையால், காவிரி ஆற்றில் வினாடிக்கு சுமார் 60,000 கனஅடி வரை இருந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்து வந்தது.

இதனால், கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுக்கு நீர்வரத்து முழுவதுமாக குறைந்தது. தொடர்ந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 800 கனஅடி மட்டுமே நீர்வரத்து வந்து கொண்டிருந்தது. இதனால் ஒகேனக்கல்லில், காவிரி ஆறு நீரின்றி வெறும் பாறைகளாக காட்சியளித்து வந்தது.

இந்நிலையில், கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனையடுத்து இன்று காலை காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.

இதனால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுக்கு வினாடிக்கு 800 கன அடியாக இருந்த நீர்வரத்து, வினாடிக்கு 4,000 கன அடியாக உயர்ந்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பாறைகளை மூழ்கடித்துவாறு தண்ணீர் செல்கிறது. மேலும் ஒகேனக்கல் மெயினருவி, சினி அருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

தொடர்ந்து மழை அதிகரித்தால் மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மத்திய நீர் ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். தற்பொழுது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க தொடங்கி உள்ளது. மேலும் தற்பொழுது வினாடிக்கு 4,000 கனஅடி தண்ணீர் வருவதால், சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் ஒகேனக்கல் சுற்றுலா தலத்தை நம்பியுள்ள தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 22 March 2022 6:45 AM GMT

Related News