ஒரே கிராமத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தருமபுரி அருகே ஒரே கிராமத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
தருமபுரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனை தடுக்கும் வகையில் நல்லம்பள்ளி ஒன்றியத்துக்குட்பட்ட ஏ.ஜெட்டிஅள்ளி பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, அங்குள்ள ராயல் நகர் பகுதியில் வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அதேப்பகுதியை சேர்ந்த சிலருக்கு சளி, காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட ஆய்வில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர்களை உடனடியாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
உடனடியாக அப்பகுதியில் பிளீச்சிங் பவுடர், கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, அந்தப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. இந்த ஆய்வின்போது வட்டார மருத்துவ அலுவலர் வாசுதேவன், சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், திருவேங்கடம் ஆகியோர் உடனிருந்தனர்.