கழிவு நீர், குப்பை கலப்பால் கடலூர் வெள்ளி கடற்கரை செந்நிறமாக மாறியது
தென்பெண்ணை,கெடிலம் ஆறுகளின் நீர் கடலூர் கடலில் கலந்ததால் நிறம் மாறிய கடல் குப்பை கழிவுகளாக காட்சியளிக்கிறது.
HIGHLIGHTS
கடலூர் மாவட்டம் ஒரு வடிகால் மாவட்டம், மழை வெள்ளம் என அனைத்திலும் பாதிக்கப்படும் கடலூர் மாவட்டம். இந்த முறை வடகிழக்கு பருவ மழையினாலும், தென்பெண்ணை ஆற்றின் வெள்ளப்பெருக்காலும் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் பெய்யும் மழைநீர் தென்பெண்ணை,கெடிலம் ஆறுகளின் வழியாக கடலூரில் வங்கக் கடலில் கலக்கிறது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்திலும் கடந்த 4 நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் தென்பெண்ணை ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீர் கடலில் கலக்கிறது.
இதன் காரணமாக கடலூர் வெள்ளி கடற்கரை செந்நிறமாக மாறி உள்ளது. மேலும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் ஆறுகள் நீர் நிலைகளில் இருந்து அடித்து வரப்பட்ட ஆகாயத்தாமரை மற்றும் குப்பை கழிவுகள் கடற்கரையில் தேங்கி கடற்கரை மிகுந்த மோசமாக காட்சி அளிக்கிறது.
ஆசியாவின் மிக நீளமான கடற்கரைகளில் இரண்டாவது இடத்தில் உள்ள வெள்ளி கடற்கரை தொடர் மழை எதிரொலியாக குப்பை கடற்கரையாக மாறி உள்ளது. இதனை மாநகராட்சி நிர்வாகம் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.