அதிமுக - பாஜக மோதல் வழக்கு: வானதி சீனிவாசன் நீதிமன்றத்தில் ஆஜர்
கடந்த 2016ம் ஆண்டு அதிமுகவும் பாஜகவும் மோதல் ஏற்பட்ட வழங்கில் எம்எல்ஏ வானதி சீனிவாசன் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
HIGHLIGHTS
கடந்த 2016ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது, கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர்களாக பாஜக சார்பில் வானதி சீனிவாசனும் அதிமுக சார்பில் அம்மன் அர்ஜுனனும் போட்டியிட்டனர்.
தேர்தல் பிரச்சாரம் முடிந்து வானதி சீனிவாசன் கடைவீதி பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றபோது அதிமுகவை சேர்ந்த முன்னாள் கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் ஆதிநாராயணனுக்கும் பாஜகவினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.
இதையடுத்து பாஜகவினர் தன்னை தாக்கியதாக கூறி ஆதிநாராயணன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து கடைவீதி போலிசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை இன்று கோவை கூடுதல் நீதிமன்றம் எண்5 ல் நடைபெற்றது.
இந்நிலையில் பாஜகவை சேர்ந்த கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நேரில் ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கை 23ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.