இலங்கையிலிருந்து சென்னைக்கு பார்சலில் கடத்திவரப்பட்ட வைரம் பறிமுதல்
இலங்கையிலிருந்து சென்னைக்கு பார்சலில் கடத்திவரப்பட்ட வைரம், ரத்தின கற்கள் பறிமுதல் செய்தது தொடர்பாக தொழிலதிபர் வங்கி கணக்கு முடக்கப்பட்டது.
HIGHLIGHTS
இலங்கையிலிருந்து சென்னைக்கு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஒரு பார்சல் சென்னையில் உள்ள ஒரு நகை கடைக்கு வந்தது. அதில் பெரிய அளவு வைரம், ரத்தின கற்கள் கடத்தி வரப்படுவதாக சிறப்பு புலனாய்வு துறையிடமிருந்து சென்னை விமானநிலைய சுங்கத்துறைக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பார்சலை டெலிவரி கொடுக்காமல் தடுத்து நிறுத்தினர். அந்த பார்சலை சோதனையிட்டனர். அதில் ரூ.5.85 லட்சம் மதிப்புடைய செமி வைரக்கற்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து பார்சலை திறந்து பார்த்து சோதனையிட்டனர்.
அந்த பார்சலில் வைரக்கற்கள் 204 காரட் மற்றும் உயர்ரக ரத்தின கற்கள் இருப்பதை கண்டுப்பிடித்தனர். அவைகளின் மதிப்பு ரூ.4.43 கோடி ஆகும். இதையடுத்து சுங்க அதிகாரிகள் வைரக்கற்களையும், உயர் ரக ரத்தினகற்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த பார்சலை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்த தொழில் அதிபரின் வங்கி கணக்கையும், அதிலிருந்த ரூ.60 லட்சம் பணத்தையும் முடக்கினர். அவருடைய நிறுவனத்தை சோதனையிட்டு ரூ.56 ஆயிரம் பணம் மற்றும் கணக்கு புத்தகங்களையும் கைப்பற்றி மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.