சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் இளைஞருக்கு 35 ஆண்டு சிறைத்தண்டனை
அரியலூர் மாவட்டத்தில் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் இளைஞருக்கு 35 ஆண்டு சிறை மற்றும் ரூ. 20,000 அபராதம் விதிக்கப்பட்டது.
HIGHLIGHTS
அரியலூர் நகரில் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்வதாக கூறி சித்துடையார் கிராமம், தெற்கு தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜதுரை (22) என்பவர் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்தாக்குதல் செய்துள்ளார். இவருக்கு எதிராக, அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மகாலெட்சுமி வழக்கு பதிவு செய்து, குற்றவாளி மீது அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் தகுந்த ஆதாரங்களுடன் வழக்கு தொடர்ந்தார்.
அரியலூர் மகிளா நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து ராஜதுரைக்கு போக்சோ வழக்கின் கீழ் 25 ஆண்டுகாலம் சிறை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தது. மேலும் கடத்திச் சென்ற குற்றத்திற்காக 10 ஆண்டு சிறையும் ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தண்டனை வழங்கியுள்ளது. இதனை அடுத்து ராஜதுரையை, காவல்துறையினர் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.