"பசுமை தமிழ்நாடு இயக்கம்" சார்பில் மரக்கன்றுகளை நட்ட மாவட்ட கலெக்டர்
அரியலூர் மாவட்டத்தில் “பசுமை தமிழ்நாடு இயக்கம்” சார்பில் மரக்கன்றுகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நட்டு வைத்தார்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம், வேட்டக்குடி ஊராட்சியில் "பசுமை தமிழ்நாடு இயக்கம்" சார்பில் மரக்கன்றுகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி இன்று நட்டு வைத்தார். இந்நிகழ்ச்சியில், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் இன்று செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் தமிழகத்தின் வனப்பரப்பை அதிகப்படுத்தும் நோக்கில் நடப்பாண்டில் முதற்கட்டமாக 2 கோடியே 80 இலட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை பள்ளி மாணவர்களுடன் 500 உள்ளுர் நாட்டு மரக்கன்றுகளை நட்டு பசுமை தமிழ்நாடு இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக அரியலூர் மாவட்டம், வேட்டக்குடி ஊராட்சியில் "பசுமை தமிழ்நாடு இயக்கம்" சார்பில் மரக்கன்றுகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நட்டு வைத்தார். இந்நிகழ்வில் 2 ஹெக்டேர் பரப்பளவில் 2,000 மரக்கன்றுகள் நடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இன்று முதற்கட்டமாக 500 நாட்டு மரக்கன்றுகளான வேம்பு, இலுப்பை, நாவல், மருது, நீர் மருது, புங்கன் போன்ற மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது.
மேலும், அரியலூர் மாவட்டத்தில் விவசாய இடங்கள், பெரு நிறுவனங்களின் இடங்கள், அரசு புறம்போக்கு மற்றும் மேய்ச்சல் புறம்போக்கு இடங்கள், அரசு அலுவலகங்கள், வனத்துறைக்கு சொந்தமான இடங்கள் ஆகிய இடங்களில் இந்த ஆண்டு "பசுமை தமிழ்நாடு இயக்கம்" சார்பில் 40,000 நாட்டு மரக்கன்றுகள் மற்றும் பழவகை மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எரக்குடி ஊராட்சியைச் சேர்ந்த 50 பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டு, மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலர் குகணேஷ், கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், வட்டாட்சியர் கண்ணன், ஊராட்சி மன்றத்தலைவர் உலகநாதன் மற்றும் வன சரக அலுவலர்கள், வன ஊழியர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.