/* */

விருதுநகரில் ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

சோதனையின் போது உரிய கணக்குகள் இல்லாமல் இருந்த ரூ.6.68 லட்சம் பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர்

HIGHLIGHTS

விருதுநகரில்  ஊராட்சிகள்  உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை
X

விருதுநகர் பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய திடீர் ஆய்வு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திஸ் முதல் தளத்தில், ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த உமாசங்கர் (57), உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு அலுவலகத்தில் இருந்து, சொந்த ஊருக்கு செல்வதற்காக உமாசங்கர் புறப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராமசந்திரன் தலைமையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் அலுவலகத்தை சுற்றி வளைத்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது உதவி இயக்குனர் உமாசங்கர் வைத்திருந்த பையில் இருந்து 6 லட்சத்து, 68 ஆயிரம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. உரிய கணக்குகள் இல்லாமல் இருந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். மேலும் இது தொடர்பாக நள்ளிரவு வரை லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டு 6 லட்சத்து, 68 ஆயிரம் ரூபாய் பணத்தை கைப்பற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு இதே அலுவலகத்தில் உதவி இயக்குனராக இருந்த விஷ்ணுபரண், அவரது கார் ஓட்டுனர் சரவணன் இருவரும் கணக்கில் வராத, லஞ்சப்பணம் விவகாரத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

அரசுத்துறை அதிகாரிகள் அல்லது ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் 14400 என்ற லஞ்ச ஒழிப்பு உதவி எண்ணை அழைக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த உதவி எண்ணிற்கு வரும் புகார்கள் மீது 15 முதல் 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. லஞ்ச ஒழிப்பு துறை அமைப்பானது, முற்றிலும், சென்னையில் தலைமைச்செயலகத்தில் இயங்கி வரும் CHIEF SECRETARY அந்தஸ்த்தில் உள்ள VIGILANCE COMMISSIONER- அவர்களின் கட்டுப்பாட்டிலும், சென்னை ஆலந்தூரில் உள்ள DGP அல்லது ADDL.DGP அந்தஸ்த்தில் உள்ள,ஒரு மூத்த IPS அதிகாரியின் தலைமையில் இயங்கிவரும்,DVAC என்றழைக்கப்படும் "Directorate of Vigilance and Anti-Corruption" என்ற இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டிலும் மட்டும்தான் செயல்படுகின்றனர். இன்னும் சொல்லப்போனால், மேற்சொன்ன மாவட்ட அதிகாரிகளின் செயல் பாடுகளையே கண்காணித்து, தவறு இருப்பின் நடவடிக்கை எடுக்க கடமைப்பட்டவர்கள்.

லஞ்ச ஒழிப்புச்சட்டம்-என்று அழைக்கப்படும் PREVENTION OF CORRUPTION ACT 1988- பிரிவு-2 பிரகாரம், அரசுப்பணியில் உள்ள அரசு ஊழியர்கள் மட்டுமின்றி, மக்களால் பொதுப்பணிக்கென தேர்ந்தெடுக்கப்படும், பஞ்சாயத்துப் போர்டு தலைவர், வார்டு உறுப்பினர்கள், நகரம், மாவட்டம் மற்றும் முனிசிபல் கவுன்சிலர்கள், சேர்மன் மற்றும் அரசு நிர்வாகத்தில் உள்ள அனைத்து மக்கள் பிரதிநிதிகளும்- "PUBLIC SERVANTS" என்ற வரையரறைக்குட்பட்டதால், கடைநிலையில் உள்ள ஒரு வி.எ.ஓ.-வை எப்படி நூறுக்கும், இருநூறுக்கும், அந்தச்சட்டத்தின் கீழ், எளிதில் பொறி வைத்துப் பிடிக்கிறார்களோ, அதேபோல் பொறிவைப்பு நடவடிக்கைக்கு உட்பட்டவர்கள்தான்.

சமீபத்தில், திருச்சி, நாகப்பட்டினம் மற்றும் பல மாவட்டங்களில், பஞ்சாயத்துபோர்டு தலைவர்களைக்கூட லஞ்சஒழிப்பு போலீஸார் பொறி வைத்து பிடித்துள்ளனர். தமிழகம் முழுவதும் தீபாவளி நேரத்தில் பல்துறை அலுவலகங்களில் தலைவிரித்தாடும் லஞ்சத்தை கட்டுப்படுத்த, வட்டார போக்குவரத்து அலுவலகம் தொடங்கி காவல்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, மின்வாரியம் என லஞ்சஒழிப்பு போலீஸார் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருவது பொது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.




Updated On: 15 Oct 2022 10:00 AM GMT

Related News