/* */

அதிமுக வெற்றி பெற செய்ய மக்கள் தயாராக வேண்டும்: முன்னாள் அமைச்சர் பேச்சு

தமிழ்நாட்டில், எந்த நேரத்திலும் நாடாளுமன்றம் மற்றும் சட்ட மன்றங்களுக்கான தேர்தல்கள், ஒரே நேரத்தில் வரலாம்

HIGHLIGHTS

அதிமுக வெற்றி பெற செய்ய மக்கள் தயாராக வேண்டும்: முன்னாள் அமைச்சர் பேச்சு
X

 சிவகாசியில், விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி, ராஜேந்திர பாலாஜி

அதிமுகவை வெற்றி பெற வைக்க மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்றார் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலஜி.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசும்போது, திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளில் ஏழைகளுக்கான அனைத்து திட்டங்களையும் நிறுத்தியது தான் அவர்களின் சாதனை. குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு மாதாமாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை தருவதாக கூறியவர்கள் தற்போது வரை கொடுக்கவில்லை.

திமுக தனது தேர்தல் வாக்குறுதியில், 520 வாக்குறுதிகளை கூறியிருந்தது. அதில் ஒன்றைக்கூட அவர்கள் நிறைவேற்ற வில்லை என்று தமிழக மக்கள் கூறுகின்றனர். திமுக கட்சி பொய்யை சொல்லி, மக்களை ஏமாற்றி வாக்குகளை வாங்கினார்கள். தற்போதைய தமிழக விளையாட்டு துறை அமைச்சர், விளையாட்டுத் தனமாக ஒற்றை செங்கலை காட்டி மக்களை ஏமாற்றி வாக்குகளை வாங்கினார். திமுக ஆட்சியில், மக்கள் வாழ முடியாத அளவிற்கு அனைத்துப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

எதிர்கட்சி தலைவராக இருந்தபோது, அரசு ஊழியர்களுக்காக குரல் கொடுத்த முதல்வர் ஸ்டாலின், தற்போது அவர்களை கண்டு கொள்வதே இல்லை. திமுக, மக்களை பாதுகாக்க ஆட்சி நடத்தவில்லை, அவர்களின் குடும்பத்தை பாதுகாக்கவே முதல்வர் ஆட்சி நடத்துகிறார். திமுக ஆட்சி மீது, மக்கள் மிகவும் கோபமாக உள்ளனர். முதல்வர் சொல்வதை அமைச்சர்கள் கேட்பதில்லை, அமைச்சர்கள் சொல்வதை முதல்வர் கேட்பதில்லை, அரசு சொல்வதை மக்கள் கேட்க தயாராக இல்லை.

தமிழ்நாட்டில், எந்த நேரத்திலும் நாடாளுமன்றம் மற்றும் சட்ட மன்றங்களுக்கான தேர்தல்கள், ஒரே நேரத்தில் வரலாம் வரும் நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டமன்ற தேர்தல் வருவதற்கான வாய்ப்பு உள்ளதால் திமுகவினருக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் வரும் என்ற அச்சத்தில் திமுகவினர் உள்ளனர். எந்த நேரத்திலும், இரண்டு தேர்தல்களும் ஒரே நேரத்தில் வரலாம். மக்கள் தயராக இருந்து அதிமுக கட்சியை வெற்றி பெறச் செய்து மீண்டும் ஆட்சியில் அமர வைக்க வேண்டும் .

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப். 27ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில், எதிர்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலருமான எடப்பாடி பழனிசாமி அறிவிக்கும் வேட்பாளரை வெற்றி பெறச்செய்ய வேண்டும். இந்தத்தேர்தலுக்குப்பிறகு அதிமுகவில் அந்த அணி, இந்த அணி என்ற எந்த பிரிவும் இல்லாமல் போய்விடும். அதற்காக அதிமுக தொண்டர்கள் அயராது பாடுபட்டு ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்து மக்கள் விரோத திமுக அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றார் ராஜேந்திரபாலாஜி.




Updated On: 23 Jan 2023 4:25 AM GMT

Related News