காட்பாடி அடுத்த லத்தேரியில் மாடு விடும் விழா நடத்த முயற்சி போலீசார் வந்ததும் ஓட்டம் பிடித்த இளைஞர்கள்
காட்பாடி அடுத்த லத்தேரியில் மாடு விடும் விழா நடத்த முயற்சி போலீசார் வந்ததும் ஓட்டம் பிடித்த இளைஞர்கள்
HIGHLIGHTS
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக குறைந்து வருவதால் ஊரடங்கிலும் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதேநேரத்தில் பள்ளி , கல்லூரிகள் மற்றும் சினிமா தியேட்டர்கள் திறக்கப்படவில்லை . மக்கள் அதிகளவில் கூடும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது . திருமணத்தில் குறைந்தளவு மக்களே கலந்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் இன்னும் அமலில் உள்ளது . இதனால் தமிழகத்தில் ஜனவரி மாதம் தொடங்கும் மாடு விடும் விழா , ஜல்லிக்கட்டு , மஞ்சு விரட்டு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை .
இந்நிலையில் காட்பாடி அடுத்த லத்தேரி ஏரிக்குள் இன்று அனுமதியின்றி சிலர் மாடு விடும் விழா நடத்த முயற்சிப்பதாகவும் இதற்காக காளைகள் குவிந்திருப்பதாகவும் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . அதன் பேரில் லத்தேரி போலீசார் அங்கு விரைந்து சென்றனர் . திடீரென போலீசார் வருவதை கண்டதும் அங்கிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர் . மேலும் சிலர் தாங்கள் கொண்டு வந்த காளைகளையும் வேக வேகமாக ஓட்டிச் சென்றனர் . இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது .