தாமிரபரணியை சுத்தப்படுத்த நடவடிக்கை- நயினார்நாகேந்திரன்
தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் இன்று காலை முதல் சிந்துபூந்துறை, மேக லிங்கபுரம், உடையார்பட்டி, மணிமூர்த்தீஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்தார் . ஒவ்வொரு இடங்களிலும் பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கி மக்களிடையே தனது வாக்குறுதிகளை பற்றி எடுத்துரைத்தார் . அப்போது மக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்தும், பொன்னாடை அணிவித்தனர் .பிரச்சாரத்தின் போது பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக வேட்பாளருடன் வாக்கு கேட்டு சென்றனர்.
பின்னர் நயினார் நாகேந்திரன் பேட்டியில் கூறியதாவது-திருநெல்வேலியின் முக்கிய பிரச்சனையான போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கு ரிங்ரோடு அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பேன். தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுப்பேன். குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு முழுமூச்சாக பாடுபடுவேன். வெற்றியை பொறுத்தமட்டில் அது மக்களுடைய கையில்தான் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் போகின்ற இடமெல்லாம் மக்கள் ஆதரவை பார்க்கும்போது அபரிமிதமான வெற்றி இருக்கும் என்று நம்புகிறேன் என்று கூறினார்.