நெல்லையில் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நெல்லையில் அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் திருப்பலி நடத்தி நற்செய்திகள் வழங்கப்பட்டன.
HIGHLIGHTS
நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்து பிறப்பு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலயம், உடையார்பட்டி திருஇருதய ஆலயம், கத்தீட்ரல் பேராலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் கிறிஸ்த்தவ மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கிறிஸ்துமஸ் விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி நெல்லை மாவட்டத்தில் கிறிஸ்து பிறப்பு விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
விழாவினையொட்டி மாநகர் பகுதிகளில் சாலைகள், தெருக்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தேவாலயங்களும் மின்னொளியில் மிளிர்ந்தன. பாளையங்கோட்டை தூய சவேரியார் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தினையில் பாளையங்கோட்டை மறைமாவட்ட கத்தோலிக்க பேராயர் அருட்திரு.அந்தோணி சாமி சவரிமுத்து கலந்து கொண்டு திருப்பலி நடத்தி நற்செய்தி வழங்கினார்.
உடையார்பட்டியில் உள்ள இருதய ஆலயத்தில் அருட் சகோதரர் எரிக் ஜோ மற்றும் பங்குத்தந்தை மிக்கேல் ராசு திருப்பலி நடத்தி நற்செய்தி வழங்கினார் அதேபோல் கத்தீட்ரல் பேராலயத்தில் அதிகாலை 3 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. விழாவினையொட்டி கிறிஸ்தவ மக்கள் புத்தாடை அணிந்து பிரார்த்தனையில் கலந்து கொண்டு, பின்னர் ஒருவருக்கு, ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
இதுபோன்று மாவட்டத்தில் வள்ளியூர், அம்பாசமுத்திரம், களக்காடு, சேரன்மகாதேவி, உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.