காட்டுநாயக்கர் சமுதாயத்திற்கான சாதி சான்றிதழ் வழங்க கோரிக்கை
காட்டுநாயக்கர் சமுதாயத்திற்கான சாதி சான்றிதழ்களை வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு
HIGHLIGHTS
நெல்லை மாவட்டத்தில் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்ட காட்டுநயக்கர் சமுதாயத்திற்கான சாதி சான்றிதழ்களை உடனடியாக வழங்க வலியுறுத்தி பள்ளி மாணவர்களுடன் 50 க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் பத்தமடை மற்றும் புதுக்குடி பகுதிகளில் சுமார் 300 க்கும் மேற்பட்ட காட்டுநாயக்கன் சமுதாய பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதில் 150-க்கும் மேற்பட்டோர் பள்ளி கல்வி பயின்று வருகின்றனர். அவர்களுக்கு உயர்கல்வி படிப்பதற்கு ஜாதி சான்றிதழ் தேவைப்படும் நிலையில் ஆன்லைன் மூலம் வருவாய் துறையினரிடம் சாதி சான்றிதழ் கோரி விண்ணப்பம் செய்த நிலையில் அவர்களது விண்ணப்பம் பலமுறை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மாணவ-மாணவிகளுடன் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில்: எங்களது சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 150 குடும்பங்களுக்கு சாதிசான்றிதழ் இதுவரை வழங்கப்படவில்லை.இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் மேற்படிப்புக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அரசு எங்களுக்கு மற்ற சமுதாயத்தினரை போல பல்வேறு சலுகைகளை வழங்கி வரும் நிலையில், சாதிசான்றிதழ் மற்றும் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. எனவே அதனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.