நெல்லையப்பர் கோவிலின் மூன்று வாசல் கதவுகள் 17 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்பு பூஜையுடன் திறப்பு
அமைச்சர் சேகர்பாபு உத்தரவுப்படி, நெல்லையப்பர் கோவில் வடக்கு, மேற்கு மற்றும் தெற்கு வாசல் கதவுகள் திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு கோயில் கதவுகள் திறக்கப்பட்டு, கோவில் யானை வரவழைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
HIGHLIGHTS
2004ம் ஆண்டு நெல்லையப்பர் கோவிலின் மூடப்பட்ட மூன்று வாசல் கதவுகள் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டது. சிறப்பு பூஜையில் பக்தர்கள் உற்சாகமுடன் கலந்துகொண்டனர்.
நெல்லை என்றாலே இருட்டுக்கடை அல்வாவும், பழமைவாய்ந்த நெல்லையப்பர் கோவிலும் தான் மிகவும் புகழ் பெற்றதாகும். நூற்றாண்டுகளைக் கடந்து கம்பீரமாகக் காட்சியளிக்கும் நெல்லையப்பர் கோவிலை இம்மாவட்ட மக்கள் தங்களின் அடையாளமாக கருதி வருகின்றனர். பிற சிவன் கோயில்களைப் போன்றே நெல்லையப்பர் கோவிலிலும் வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு, என நான்கு திசைகளில் கதவுகள் அமைக்கப்பட்டிருக்கும்.
இந்த சூழ்நிலையில் கடந்த 2004ம் ஆண்டு நெல்லையப்பர் கோவில் வடக்கு புற வாசல் அருகே ஒரு கொலை சம்பவம் அரங்கேறியது. இதையடுத்து பாதுகாப்பு கருதி அன்றிலிருந்து கோவிலின் வடக்கு மற்றும் மேற்கு புற வாசல்கள் மூடப்பட்டது. அந்த வழியாக பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
கடந்த 17 ஆண்டுகளாக இரண்டு வாசல் கதவுகளுப் பூட்டியே கிடந்தது. முக்கிய திருவிழா நேரங்களில் மட்டும் அந்த இரண்டு கதவுகளும் திறக்கப்படும். திருவிழா முடிந்த மறு நொடியே கதவுகள் மீண்டும் மூடப்பட்டு விடும். இந்த சூழ்நிலையில் இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு சமீபத்தில் நெல்லையப்பர் கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கோவிலில் பூட்டிக் கிடக்கும் வடக்கு, தெற்கு மற்றும் மேற்குப் புற வாசலை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதையடுத்து இரண்டு வாசல்களையும் உடனடியாக திறக்க கோவில் நிர்வாகத்திற்கு அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டார்.
ஆனால், அங்கு போலீஸ் பாதுகாப்பு போடுவது தொடர்பாக மாநகர காவல் துறையிடம் அனுமதி வாங்க வேண்டியிருந்தது. கோவில் நிர்வாகம் கடிதம் எழுதியதைத்தொடர்ந்து காவல்துறையின் உத்தரவு கிடைத்தது. இதையடுத்து இன்று நெல்லையப்பர் கோவில் வடக்கு, மேற்கு மற்றும் தெற்கு வாசல் கதவுகள் திறக்கும் நிகழ்வு நடைபெற்றது.
17 ஆண்டுகளுக்குப் பிறகு கோயில் கதவுகள் திறக்கப்பட்டதால் அதை பார்க்க பக்தர்கள் திரளாக வந்திருந்தனர். வாசல்களுக்கு கோயில் யானை வரவழைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பிறகு தீபம் காட்டப்பட்டு மூன்று வாசல் கதவுகளும் திறக்கப்பட்டது. இதை கண்டு பக்தர்கள் உற்சாகத்துடன் சிவ கோஷம் எழுப்பினர். தற்போது திறக்கப்பட்டுள்ள நெல்லையப்பர் கோவிலின் வடக்கு மேற்கு மற்றும் தெற்கு புற வாசலில் கோயில் பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.