தீக்குளிக்க முயன்ற 10 பேர் மீது வழக்கு
திருநெல்வேலி தச்சநல்லூரில் தீக்குளிக்க முயன்ற 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருநெல்வேலி டவுனைச் சேர்ந்த அஜித் என்ற வாலிபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மானூர் பகுதியில் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தச்சநல்லூரைச் சேர்ந்த கண்ணபிரான் என்பவரை மானூர் போலீசார் கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து கண்ணபிரானின் மனைவி பேச்சியம்மாள் மற்றும் கண்ணபிரானின் ஆதரவாளர்கள் தச்சநல்லூர் காவல் நிலைய பகுதிக்கு வந்து போராட்டம் நடத்தினார்கள்.
கண்ணபிரான் மீது போடப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெறாவிட்டால் தீக்குளிக்கப் போவதாகவும் தெரிவித்தனர். இது தொடர்பாக பேச்சியம்மாள் மற்றும் கண்ணபிரானின் ஆதரவாளர்களான தீபக், பாஸ்கர், அபினேஷ், கொம்பையா, வேல்முருகன் உள்பட 10 பேர் மீது தச்சநல்லூர் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.