சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க கோரி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு
சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க கோரி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.
HIGHLIGHTS
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்கள். அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பொதுமக்கள் தங்களது பகுதியில் உள்ள பிரச்சினைகளை மனுவாக எழுதி கொடுத்தனர்.
கடந்த வாரம் தீபாவளி பண்டிகை திங்கட் கிழமை கொண்டாடப்பட்டதால் அன்று அரசு விடுமுறைநாளாகி விட்டது. இதனால் அன்று பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற வில்லை. இதன் காரணமாக இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மக்கள் அதிக அளவில் வந்து குவிந்தனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருச்சி மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன் கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
திருச்சிராப்பள்ளி மாவட்டம் ,ஶ்ரீரங்கம் வட்டம் அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொடியாலம். கோப்பு கிராம ஊராட்சிகளில் ,கொடியாலம் கிராம ஊராட்சியில் கொடியாலத்தில் உள்ள ஆலம்களமசாலை,கொடியாலம் மேலத்தெரு இணைப்பு சாலை, −மாங்கரைபேட்டை சாலை,சப்பாணி கோவில் ஆதிதிராவிடா் மாயான சாலை,கொடியாலம்−சின்ன கருப்பூா் இணைப்பு கோனகரை சாலை, புலிவலம் சுப்பிரமணி சுவாமி கோவில்−சுப்ராயன்பட்டி இணைப்பு சாலை,புலிவலம் சுப்பிரமணிசுவாமி கோவில் முதல் பட்டி பிள்ளையாா் கோவில் வரை உள்ள சாலை,தெற்க்கு புலிவலம் கொடிங்கால்கரை ஆதிதிராவிடா் மயான சாலை அயிலாப்பேட்டை ஆதி திராவிடா் மாயனசாலை, வடக்குதெரு சாலை, காட்டுத் தெரு சாலை,உய்யகொன்டான் ஆறு வரை உள்ள சாலை,
கோப்பு கிராம ஊராட்சியில் கோப்பு முதலைபட்டி இணைப்பு சாலை ,மொட்டபழனிகாடு சாலை,வண்டிகாரன் தோப்பு சாலை ஆகிய தாா்சாலைகள் கடந்த 2021,அக்டோபா்,நவம்பா் மாதங்களில் பெய்த தொடா் மழையில் பலசாலைகள் வெள்ள நீரில் மூழ்கியும்,அணைத்து சாலைகளும் தொடா் மழையால் குண்டும் குழியுமாகி பொதுமக்கள் போக்கு வரத்துக்கு லாயக்கற்றதாக இருந்து வந்ததோடு தற்போது பெய்து வரும் மழையால் மேலும் மேலும் மோசமாகி வருகிறது.
ஆதலால் இச்சாலைகளில் தனி கவனம் செலுத்தி இக் கிராமபுற சாலைகளை சீரமைத்து தர உாிய நடவடிக்கை எடுக்க வேன்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் இந்த மனுவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
மேலும் மழைநீர் வடிகால் பிரச்சினை, மயான பாதை பிரச்சினை, தொடர் மழையால் பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு, முதியோர் உதவி தொகை, ஓய்வூதிய தொகை, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனை பட்டா, குடும்ப அட்டை, நிலப்பிரச்சினை உள்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும் மக்கள் ஏராளமான மனுக்களை கொடுத்தனர்.