'தேர்தலில் போட்டியிட்டால் பதவி பறி போகும்' - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
'தேர்தலில் போட்டியிட்டால் பதவி பறி போகும்' - ஊரக உள்ளாட்சி கவுன்சிலர்களுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
HIGHLIGHTS
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் பிப்ரவரி 4ம் தேதி ஆகும்.
முக்கிய அரசியல் கட்சிகள் இன்னும் தங்களது வேட்பாளர்களை அறிவிக்காத நிலையில் சுயேச்சைகள் மட்டும் மனு தாக்கல் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் மாநில தேதர்தல் ஆணையம் இன்று ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அது என்ன எச்சரிக்கை அறிவிப்பு?
தமிழகத்தில் ஏற்கனவே ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட ஊராட்சி தலைவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர், ஒன்றிய கவுன்சிலர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் என பதவிகளில் உள்ளனர். இவர்கள் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எந்த பதவிக்காவது போட்டியிட விரும்பினால் ஏற்கனவே தாங்கள் வகித்து வரும் பதவியை முறைப்படி உரிய அதிகாரிகளுக்கு விண்ணப்பம் அனுப்பி ராஜினாமா செய்து விட்டு தான் போட்டியிட வேண்டும். இதனை செய்யாமல் அவர்கள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டால் அவர்களது பதவி பறிக்கப்பட்டு விடும் என்பதே அந்த எச்சரிக்கை அறிவிப்பு ஆகும்.