மந்த்ராலயம் செல்கிறது ஸ்ரீரங்கம் அரங்கநாதரின் சீர் வரிசை பொருட்கள்
ஸ்ரீரங்கம் அரங்கநாதரின் சீர் வரிசை பொருட்கள் ஆந்திராவில் உள்ள மந்த்ராலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டு உள்ளது.
HIGHLIGHTS
தமிழக சட்டமன்றத்தில் இதர மாநிலங்களில் உள்ள திருக்கோவில்களுக்கும் தமிழக திருக்கோயில்களில் இருந்து வஸ்திர மரியாதை வழங்கிட அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி தற்போது ஆந்திர மாநிலத்தில் உள்ள திருமலை திருப்பதி கோவிலில் இருந்து ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வஸ்திர மரியாதை வழங்கப்பட்டு வருகிறது.
மாநிலங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் உறவு மேம்பட தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அறிவிப்பினை நிறைவேற்றும் விதமாக ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலின் வஸ்திரம் மரியாதை மற்றும் பகுமானம் எனப்படும் சீர் பொருட்கள் உள்ளிட்டவை ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் மூல பிருந்தாவனமான மந்த்ராலயத்தில் வருகிற 12- 8- 2022-ம் தேதி அன்று வழங்கப்படுகிறது.
மேற்படி மடத்தின் வேண்டுகோளினை ஏற்றும் மேற்படி வஸ்திரம் மரியாதை வழங்குவது குறித்தும் திருக்கோவிலின் தலைமை அர்ச்சகரின் கருத்து கேட்கப்பட்டு திருக்கோவிலின் தலைமை அச்சகரின் கருத்துருவின்படியும் தக்கார் தீர்மானம் இயற்றப்பட்டது. இதனையடுத்து திருக்கோவில் நிர்வாகத்தினர் ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிகளின் மூல பிருந்தாவனத்திற்கு 12ஆம் தேதி வழங்குவதற்கான வஸ்திர மற்றும் பகுமானம் எனப்படும் சீர் பொருட்கள் உள்ளிட்டவற்றை இன்று காலை 10 மணி அளவில் கோவிலில் இருந்து முறைப்படி எடுத்துச் சென்றனர்.