அனல் மின் நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாட்டை நீக்க மா.கம்யூ. பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி தட்டுபாடு இல்லாமல் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மா.கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணன்.
HIGHLIGHTS
அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி வழங்குவதில் மத்திய அரசு கையாலாகாத நிலையில் சிக்கித் தவித்து வருகிறது என தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், ஆதிச்சநல்லூரில் 150-ஆண்டுகளாக தொல்லியல் ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஜெர்மன், பிரிட்டிஸ் போன்ற நாட்டினை சேர்ந்தவர்கள் கூட அகழாய்வு பணிகளை மேற்கொண்டு அங்கு கிடைக்கப்பெற்ற சுமார் 6-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்கால அரிதான பொருட்களை அவர்களது நாட்டிற்கு எடுத்து சென்றுள்ளனர். இதனை மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து நமது நாட்டிலிருந்து எடுத்துச்சென்ற அரிய பொருட்களை திருப்பி கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மிகவும் பலவீனமாக உள்ள தொல்லியல் துறையை பலப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைபோல் அதில் பயிலும் மாணவர்களுக்கு எல்லா துறைகளிலும் பணி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆதிச்சநல்லூர், சிவகளை, கீழடி அகழாய்வு முடிவுகளை பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பாடமாக தரவேண்டும். மேலும் தமிழகத்தில் 25-ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் இருக்கிறது அதனை படியெடுத்து பாதுகாக்க வேண்டும். மைசூரில் இருக்கக்கூடிய கல்வெட்டுகளை நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நடைபெற்று முடிந்துள்ள 9-மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பாஜக, அதிமுகவின் மோசமான நடைமுறைக்கு கிடைத்த தோல்வி. கடந்த கால ஆட்சி மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியும், தற்போது நடைபெறும் ஆட்சியின் நிதான செயல்பாடும், பிரச்சினைகளை அனுகும் முறைகளும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றியை தேடித்தந்துள்ளது.
இந்தியாவில் மத்திய, மாநில அரசுக்கு சொந்தமாக உள்ள சுமார் 135-அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரியினை வழங்குவதில் மத்திய அரசு கையாளகாத நிலையில் சிக்கி தவித்து வருகின்றது. இதை நிலை தொடர்ந்தால் பல அனல்மின் நிலையங்களில் மின் உற்பத்தி தட்டுபாடு ஏற்படக்கூடும். எனவே தனியார் அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி முன்னுரிமை கொடுத்து வழங்காமல் அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி தட்டுபாடு இல்லாமல் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுக ஆட்சியின் மீது குறை சொல்லாமல் இருந்தால் மட்டுமே ஆச்சரியப்பட வேண்டும். திமுக ஆட்சியின் மீது குறை சொல்லும் அவர், பாஜக ஆளும் மாநிலங்களில் நடைபெறும் குற்றங்களை பற்றி எதுவும் வாய் திறப்பதில்லை. இதுவே அவரது நியாய தர்மத்தை எடுத்து மக்களுக்கு காட்டிவிடும் என்றார்.
பேட்டியின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டட செயலாளர் அர்ச்சுணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம், பேச்சிமுத்து, ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் நம்பிராஜன் உள்பட பலர் உடனிருந்தனர்.