தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின்நிலையத்தில் வடமாநிலத் தொழிலாளர்களுடன் டிஐஜி கலந்துரையாடல்
தூத்துக்குடி என்டிபிஎல் அனல்மின் நிலையத்தில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்களுடன் திருநெல்வேலி சரக டிஐஜி கலந்துரையாடினார்.
HIGHLIGHTS
தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பரவிய வதந்தி அனைத்து பகுதிகளிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, வடமாநிலத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் ஏதும் நடத்தப்படவில்லை என்றும் அவர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், வடமாநிலத் தொழிலாளர்களை காவல் துறையினர் நேரில் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, தூத்துக்குடி தெர்மல்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட என்டிபிஎல் அனல்மின் நிலையத்தில் பணிபுரியடம் 250-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்களை காவல் துறை அதிகாரிகள் சந்தித்தனர்.
வடமாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றி வரும் என்டிபிஎல் அனல்மின் நிலைய வளாகத்திற்கு இன்று திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ் குமார் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் நேரடியாகச் சென்று அங்கு பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களிடம் அவர்களுக்கு புரிவதற்காக இந்தி மொழியிலேயே கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
விழிப்புணர்வு கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் பேசியதாவது:
தற்போது வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவிய வதந்தியை பார்த்து யாரும் அச்சப்படத் தேவையில்லை. அது தமிழ்நாட்டில் நடைபெறவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தை பொருத்தவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தங்கள் பகுதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போலீஸார் உட்பட அனைத்து காவல் நிலைய போலீஸாரும் உங்களது பாதுகாப்பிற்கு எந்த நேரத்திலும் தயாராக உள்ளோம்.
நீங்கள் உங்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே சென்று வர அச்சப்படத் தேவையில்லை. உங்கள் பணியின் போது விதிமுறைகளின் படி பாதுகாப்பு உபகரணங்களை கையாண்டு கவனத்துடன் பணிபுரியுங்கள் என டிஐஜி மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கேட்டுக் கொண்டனர்.
தொடர்பு எண் அறிவிப்பு:
மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் மாவட்ட காவல்துறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள புதிய உதவி அலைபேசி எண் 8249331660 என்ற எண் குறித்தும், இந்த எண்ணை தொடர்பு கொண்டு உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டாலோ குறைகள் இருந்தாலோ தகவல் தெரிவித்தால் நீங்கள் இருக்கும் இடத்திற்கு உடனடியாக காவல்துறையினர் விரைந்து வந்து நடவடிக்கை எடுப்பார்கள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் இடங்களுக்கு காவல்துறை அதிகாரிகள் அவ்வப்போது நேரில் சென்று, அவர்களது குறைகளை கேட்டறிந்து, அவர்களுக்குரிய பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் என்று திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் வடமாநிலத் தொழிலாளர்களிடம் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வின் போது தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ், தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம், முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் உட்பட காவல்துறையினர் பலர் உடனிருந்தனர்.