ஆறுகள் இணைப்புத் திட்டம்: சாத்தான்குளம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், சாத்தான்குளம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
HIGHLIGHTS
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், அரசூர்-1, அரசூர்- 2 மற்றும் நடுவக்குறிச்சி ஆகிய கிராமங்களில் தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு திட்டத்திற்கு நில எடுப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா (நிலஎடுப்பு), பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராணி, சாத்தான்குளம் வட்டாட்சியர் ரதிகலா, சாத்தான்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராணி, சுரேஷ், வட்டாட்சியர் (நிலஎடுப்பு) சித்ரா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு திட்டத்திற்கு நில எடுப்பு பணிகள் தொடர்பாக களஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் 75 கிலோ மீட்ட தூரத்திற்கு நீர்வரத்து கால்வாய்கள் கொண்டு வரப்படுகிறது. இதில் 67 கிலோ மீட்டர் திருநெல்வேலி மாவட்டத்திலும், 8 கிலோ மீட்டர் தூத்துக்குடி மாவட்டத்திலும் கால்வாய் இருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசூர் -1, அரசூர்- 2, நடுவக்குறிச்சி ஆகிய 3 வருவாய் கிராமங்களில் நில எடுப்பு பணிகள் நடைபெறுகிறது. இந்த கால்வாய் 50 மீட்டர் அகலம் கொண்டதாக இருக்கும். தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் அதிகமாக வரும்போது 3500 கனஅடி தண்ணீர் அங்கிருந்து எடுக்கப்பட்டு கருமேனியாறு - நம்பியாற்றினை இணைத்து கடைசியாக இருக்கின்ற கிராமங்களான அரசூர் -1, அரசூர்- 2, நடுவக்குறிச்சி ஆகிய பகுதிகளுக்கு 500 கன அடி தண்ணீர் வரும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 8 கிலோ மீட்டர் கால்வாய் பணிகளுக்கு 6.7 கிலோ மீட்டர் தூரத்திற்கு நில எடுப்பு செய்யப்பட்டு கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடுவக்குறிச்சி கிராமத்தில் நில எடுப்பு பணிகள் 11 பட்டாதாரர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளதால் நடைபெறாமல் உள்ளது. கடைசியாக நடுவக்குறிச்சி குளத்தில்தான் கால்வாய் முடிகிறது.
இதுதொடர்பாக பட்டாதாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். இதுகுறித்து நில நிர்வாக ஆணையர் மற்றும் பொதுப்பணித்துறை செயலர் ஆகியோரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.