பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியீடு: தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மாணவர்களுக்கு அறிவுரை
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.
HIGHLIGHTS
தமிழ்நாட்டில் இன்று 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், தேர்வில் தோல்வியோ அல்லது குறைந்த மதிப்பெண்களோ எடுத்த மாணவ, மாணவிகள் வருந்த வேண்டாம் எனவும், தோல்வியடைந்தோரின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கண்டிக்க வேண்டாம் எனவும், தோல்வியை அடுத்த முறை வெற்றிக்கான படிக்கட்டாக மாற்றுங்கள் என பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:
பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் தொடர்ந்து மென்மேலும் சிறப்பாக படித்து வாழ்க்கையில் பல வெற்றிகளை வாழ்த்துகள். இந்தத் தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளோ அல்லது குறைந்த மதிப்பெண் பெற்றவர்களோ தோல்வியைக் கண்டு வருந்த வேண்டாம். தேர்வு மட்டுமே நமது வாழ்க்கையல்ல.
தோல்வியை அடுத்த முறை வெற்றிக்கான படிக்கட்டாக மாற்றுங்கள். தோல்விடைந்தவர்களுக்கு அடுத்து ஒரிரு மாதங்களில் மீண்டும் துணைத் தேர்வு நடைபெறும், அதில் பங்கேற்று வெற்றி பெறுவதற்கான முயற்சி செய்யுமாறும், தோல்வியடைந்தவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கண்டிக்க வேண்டாம், தேர்ச்சி பெற்ற மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட்டு, ஏற்கனவே பதற்றத்தில் உள்ள உங்கள் குழந்தைகளை புண்படுத்த வேண்டாம்.
நம் குழந்தைகள் நமக்கு மிக, மிக முக்கியம் என்பதை மனதில் வைத்துக்கொண்டு பெற்றோர்கள் தங்கள் பொன்னான நேரத்தை பிள்ளைகளின் அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கான சரியான பாதையை தேர்வு செய்வதில் செலவிட்டு, அவர்களை வழிநடத்தி வெற்றியாளர்களாக மாற்றுமாறு பெற்றோர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் செய்திக் குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.