தூத்துக்குடியில் ரூ.60 லட்சம் போதை பொருள் பறிமுதல்
தூத்துக்குடியில் ரூ.60 லட்சம் மதிப்பிலான போதை பொருட்களை மதுரை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடியில் போதை பொருள் கடத்தல் சம்பவம் நடப்பதாக மதுரையில் உள்ள மத்திய போதை பொருள் தடுப்பு மற்றும் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து மதுரையில் இருந்து மத்திய போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் 6 பேர் கொண்ட குழுவினர் தூத்துக்குடி வந்தனர். அவர்கள் தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் ஒருவரது வீட்டில் சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வீட்டில் போதை பொருள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. உடனடியாக அதிகாரிகள் அங்கு இருந்த சுமார் 9 கிலோ போதை பொருளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.60 லட்சம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து போதை பொருளை பதுக்கி வைத்து இருந்ததாக ஜான்சன் உள்ளிட்ட 2 பேரை அதிகாரிகள் மடக்கி பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களை மதுரைக்கு அழைத்து சென்றனர். மேலும் இந்த போதை பொருளை தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக வைத்து இருந்தார்களா என்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.