கோவில்பட்டியில் அரசு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு நடிகர் மதன்பாப் பரிசு வழங்கல்
கோவில்பட்டி மகிழ்வோர் மன்றத்தின் 67 ஆவது மாதாந்திர கூட்டத்தில் நடிகர் மதன்பாப் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
HIGHLIGHTS
கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் மகிழ்வோர் மன்றத்தின் சார்பில் ஆண்டுதோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோவில்பட்டி மகிழ்வோர் மன்றத்தின் 67 ஆவது மாதாந்திரக் கூட்டம் மற்றும் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
கோவில்பட்டி என்.கே. மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி இதய மருத்துவர் பாலமுருகன் தலைமை வகித்தார். கடலையூர் செங்குந்தர் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் விவேகானந்தன் முன்னிலை வகித்தார். மன்ற காப்பாளர் சேர்ம துரை அனைவரையும் வரவேற்றார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீசங்கரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி நேத்ரா, கோவில்பட்டி கவுனியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஐஸ்வர்யா மீனாட்சி, ஜோதி, பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற கோவில்பட்டி செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜெயா ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
மாணவிகளுக்கு வாசிப்பதை நேசிப்பாளருக்கான நினைவு பரிசினை ரைட் வெல் ஹேண்ட் ரைட்டிங் இன்ஸ்டியூட் ஆசிரியர் கணபதியையும் பாராட்டி கோவில்பட்டி மருத்துவர் ஸ்ரீ வெங்கடேஷ் பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார். கூட்டத்தில், இனி ஒரு முடிவெடுப்போம் என்ற தலைப்பில் திரைப்பட நடிகர் மதன்பாப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
முன்னதாக பள்ளி மாணவ மாணவிகளின் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கூட்டத்தில் மன்ற இயக்குனர் ஜான் கணேஷ், காப்பாளர்கள் செல்வின், மோகன்ராஜ், தலைமையாசிரியர்கள் சண்முகக்கனி, அரிச்சந்திரன், உரத்த சிந்தனை வாசகர்வட்ட தலைவர் சிவானந்தம், கழுகுமலை திருவள்ளூர் மன்ற தலைவர் பொன்ராஜ் பாண்டியன், ஆசிரியர்கள் ராஜசேகர், ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மன்ற காப்பாளர் துரைராஜ் நன்றி கூறினார்.