சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 27 ஆண்டு சிறை
திருவாரூர் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 27 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு .
HIGHLIGHTS
திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் பகுதியைச் சேர்ந்த சரண்ராஜ் 23 .இவர் அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் ஒருவரது வீட்டிற்கு வந்த 15 வயது சிறுமியை கடந்த ஆண்டு மார்ச் மாதம் கடத்திச் சென்றுள்ளார் .
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வடபாதிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் .போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் சரண்ராஜ் அச்சிறுமியை திருப்பூர் கடத்திச்சென்றது தெரியவந்தது. மேலும் அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது விசாரணையில் கண்டறியப்பட்டது.
இதையடுத்து அனைத்து மகளிர் காவல் நிலைய திருவாரூர் போலீசார் சரண்ராஜை போக்சோ சட்டப் பிரிவின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர் .
இந்த வழக்கு திருவாரூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது, இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார் குற்றம் சாட்டப்பட்ட சரண்ராஜ் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 4 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார் .
இதையடுத்து போலீசார் சரன்ராஜை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இருபத்தி ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.